பட்டா மாறுதலுக்கு ரூ.15 ஆயிரம் லஞ்சம் வாங்கிய சர்வேயர் கைது; உதவியாளரும் சிக்கினார்


பட்டா மாறுதலுக்கு ரூ.15 ஆயிரம் லஞ்சம் வாங்கிய சர்வேயர் கைது; உதவியாளரும் சிக்கினார்
x
தினத்தந்தி 9 Oct 2019 11:15 PM GMT (Updated: 9 Oct 2019 6:49 PM GMT)

பட்டா மாறுதலுக்கு ரூ.15 ஆயிரம் லஞ்சம் வாங்கிய சர்வேயர், உதவியாளர் கைது செய்யப்பட்டனர்.

மதுராந்தகம்,

காஞ்சீபுரம் மாவட்டம் மதுராந்தகத்தை அடுத்த விண்ணம்பூண்டியை சேர்ந்தவர் செல்லப்பன் (வயது 62). இவர் தனது நிலத்திற்கு பட்டா மாறுதல் செய்ய மதுராந்தகம் தாலுகாவுக்கு உட்பட்ட ஒரத்தி சர்வேயரான மதுரையை சேர்ந்த ராஜகுரு (45) என்பவரை அணுகினார். அப்போது அவர் ரூ.23 ஆயிரம் லஞ்சமாக தரவேண்டும். அப்போது தான் உங்களுக்கு பட்டா மாறுதல் செய்யப்படும் என கூறினார்.

லஞ்சம் கொடுக்க விரும்பாத செல்லப்பன் காஞ்சீபுரம் லஞ்ச ஒழிப்பு துறை துணை போலீஸ் சூப்பிரண்டு சிவப்பாதசேகரனிடம் புகார் அளித்தார். லஞ்ச ஒழிப்பு போலீசாரின் அறிவுரையின் பேரில் முதல் தவணையாக ரசாயனம் தடவிய ரூ.15 ஆயிரத்தை ஒரத்தி வருவாய் ஆய்வாளர் அலுவலகத்திற்கு எடுத்து சென்றார்.

அங்கு சர்வேயர் ராஜகுருவிடம் பணத்தை கொடுத்த போது அவர் அந்த பணத்தை அருகில் இருந்த தனது உதவியாளர் திருப்பதி என்பவரிடம் கொடுக்கும்படி கூறினார். லஞ்ச ஒழிப்பு துறை துணை போலீஸ் சூப்பிரண்டு சிவபாதசேகரன் தலைமையிலான போலீசார் பணம் கொடுக்கும் போது இருவரையும் கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர். அவர்களை மதுராந்தகம் தாலுகா அலுவலகத்திற்கு அழைத்து வந்து ஆவணங்களை சரிபார்த்தனர்.

பின்னர் அவர்களை மதுராந்தகம் குற்றவியல் நடுவர் நீதிபதி முன்னிலையில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Next Story