செங்கப்பட்டி மின்வாரிய அலுவலகத்தில் மின் கட்டணம் செலுத்த முடியாமல் பொதுமக்கள் அவதி


செங்கப்பட்டி மின்வாரிய அலுவலகத்தில் மின் கட்டணம் செலுத்த முடியாமல் பொதுமக்கள் அவதி
x
தினத்தந்தி 9 Oct 2019 10:30 PM GMT (Updated: 9 Oct 2019 7:36 PM GMT)

3 நாட்களாக அரசு தொடர் விடுமுறையால், தடைப்பட்டிருந்த நிலையில் நேற்று பணம் செலுத்துவதற்காக அலுவலகத்திற்கு சென்றபோது பணம் செலுத்தும் அறை சாத்தப்பட்டிருந்தது. மின் கட்டணமும் வசூலிக்கப்படவில்லை.

அன்னவாசல்,

அன்னவாசல் அருகே உள்ள செங்கப்பட்டியில் மின்சார வாரிய அலுவலகம் உள்ளது. இந்த அலுவலகத்தில் சுற்றுப்புற பகுதிகளான அன்னவாசல், காலாடிப்பட்டி, சத்திரம், முக்கண்ணாமலைப்பட்டி, செங்கப்பட்டி, கீழக் குறிச்சி உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட கிராம பொதுமக்கள் தங்களது வீடுகள், கடைகள், வணிக நிறுவனங்கள் உள்ளிட்டவைகளுக்கு இங்குதான் மின்கட்டணம் செலுத்துவது வழக்கம். இதனால் அன்னவாசலை சுற்றியுள்ள பல பகுதியை சேர்ந்த பொதுமக்களுக்கு நேற்று மின்கட்டணம் செலுத்துவதற்கு கடைசி நாளாக அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில் கடந்த 3 நாட்களாக அரசு தொடர் விடுமுறையால், தடைப்பட்டிருந்த நிலையில் நேற்று பணம் செலுத்துவதற்காக அலுவலகத்திற்கு சென்றபோது பணம் செலுத்தும் அறை சாத்தப்பட்டிருந்தது. மின் கட்டணமும் வசூலிக்கப்படவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் நேற்று கட்டணம் செலுத்துவதற்கு கடைசி நாள் பணம் செலுத்த வேண்டும் என கூறியபோது மின்வாரிய அலுவலர்கள் நேற்று இந்த பகுதியில் மின் நிறுத்தம் செய்யப்பட்டுள்ளது.

இதனால் இங்கு வசூல் செய்யப்படவில்லை என கூறியதாக கூறப்படுகிறது. கடைசிநாளான நேற்று மின்கட்டணம் செலுத்தவில்லை என்றால் கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டும், வெளியில் தனியார் நிறுவனங்களில் பணம் செலுத்தினாலும் கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டும் என புலம்பி கொண்டு பொதுமக்கள் அங்கிருந்து கிளம்பி சென்று தனியார் நிறுவனங்கள் மூலம் பணம் செலுத்தினர்.

இதுகுறித்து அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கூறியதாவது:- மின் கட்டணம் செலுத்த கடைசி நாள் என்பதாலும் மின் இணைப்பு துண்டிக்கப்படாமல் இருக்கவும், கூடுதல் தொகையுடனே தனியார் மையத்தில் மின்கட்டணத்தை செலுத்தினோம். பல ஆயிரக்கணக்கான இணைப்புகளுடன் இயங்கும் இந்த அலுவலகத்தில் ஜெனரேட்டர் அல்லது இன்வெட்டர் வசதி ஏற்படுத்தப்பட வேண்டும். இதனால் பொதுமக்கள் மிகவும் அலைக்கழிக்கப் படுகின்றனர் என்றனர்.

Next Story