கரூர் ரெயில் நிலையத்தில் பயணிகளுக்காக நடைமேடையில் விரைவில் ‘லிப்ட்’ வசதி


கரூர் ரெயில் நிலையத்தில் பயணிகளுக்காக நடைமேடையில் விரைவில் ‘லிப்ட்’ வசதி
x
தினத்தந்தி 9 Oct 2019 11:00 PM GMT (Updated: 9 Oct 2019 7:43 PM GMT)

கரூர் ரெயில் நிலையத்தில் பயணிகளுக்காக நடைமேடையில் விரைவில் ‘லிப்ட்’ வசதி அமைக்கப்பட உள்ளது.

கரூர்,

சேலம் கோட்ட ரெயில்வேயில் கரூர் ரெயில் நிலையம் முக்கியமானதாக உள்ளது. கரூரில் இருந்தும், கரூர் வழியாகவும் கோவை, திண்டுக்கல், பழனி, திருச்சி, சென்னை, நாகர்கோவில், நெல்லை, ஈரோடு உள்ளிட்ட ஊர்களுக்கு ரெயில்கள் இயக்கப் படுகின்றன. தொழில் நகரமான கரூருக்கு வெளியூர்களில் இருந்து பலர் வேலைக்கு ரெயிலில் வந்து செல்கின்றனர். இதேபோல அலுவலக பணிக்காக கரூரில் இருந்து வெளியூர்களுக்கு பலர் ரெயிலில் தினமும் சென்று வருவது உண்டு. இதனால் கரூர் ரெயில் நிலையத்தில் பயணிகள் கூட்டம் அதிகமாக காணப்படும். குறிப்பாக பண்டிகை காலங்களில் கூட்டம் அலைமோதும்.

‘லிப்ட்’ வசதி

கரூர் ரெயில் நிலையத்தில் பயணிகளுக்கான அடிப்படை வசதிகள் தற்போது உள்ள நிலையில் இருந்து மேலும் மேம்படுத்தப்பட்டு வருகின்றன. 1 முதல் 5-வது நடைமேடைகள் வரை ரெயில்கள் இயக்கப்படுகின்றன. இதில் குறிப்பாக 1 மற்றும் 2-வது நடைமேடையில் அதிக ரெயில்கள் இயக்கப்படுவது வழக்கம்.

முதலாவது நடைமேடையில் இருந்து மற்ற நடைமேடைகளுக்கு பயணிகள் செல்ல நடைபாதை மேம்பாலம் வசதி உள்ளது. இதில் ஒரே நேரத்தில் பயணிகள் ஏறுவது, இறங்குவது போன்ற நேரங்களில் நெருக்கடி ஏற்படுகிறது. மேலும் கூட்ட நெரிசலில் தள்ளு-முள்ளும் நிகழும். இதுபோன்ற காரணங்களால் பயணிகளுக்காக ‘லிப்ட்’ வசதி அமைக்க ரெயில்வே அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.

ஏ.டி.எம். எந்திரம்

இது குறித்து கரூர் ரெயில்வே அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘‘ரெயில் நிலையத்தில் நடைமேடைகளில் பயணிகளின் கூட்ட நெரிசலை தவிர்க்க 2 லிப்ட்டுகள் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதில் முதலாவது மற்றும் 2-வது நடைமேடையில் லிப்ட் அமைக்கப்படும். இந்த திட்டத்திற்கு ரெயில்வே அதிகாரிகள் ஒப்புதல் அளித்ததும் விரைவில் பணிகள் தொடங்கப்படும். மேலும் ஏ.டி.எம். எந்திரம் வைக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது’’ என்றார்.


Next Story