மக்களுக்காக போராட்டம் நடத்தியதுண்டா? ரங்கசாமிக்கு நாராயணசாமி கேள்வி


மக்களுக்காக போராட்டம் நடத்தியதுண்டா? ரங்கசாமிக்கு நாராயணசாமி கேள்வி
x
தினத்தந்தி 9 Oct 2019 11:30 PM GMT (Updated: 9 Oct 2019 7:43 PM GMT)

எதிர்க்கட்சி தலைவர் ரங்கசாமி மக்களுக்காக போராட்டம் நடத்தியதுண்டா? என்று முதல்-அமைச்சர் நாராயணசாமி கேள்வி எழுப்பினார்.

புதுச்சேரி,

புதுவை காமராஜ் நகர் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் வேட்பாளர் ஜான்குமாருக்கு ஆதரவாக முதல்-அமைச்சர் நாராயணசாமி செந்தாமரை நகரில் வீடு வீடாக சென்று வாக்கு சேகரித்தார்.

அப்போது முதல்-அமைச்சர் நாராயணசாமி நிருபர்களிடம் கூறியதாவது:-

இந்த தொகுதியில் 2 முறை எம்.எல்.ஏ.வாக இருந்த வைத்திலிங்கம் மற்றும் கூட்டணி கட்சி தலைவர்களுடன் வீடுவீடாக சென்று வாக்கு சேகரித்து வருகிறேன். கடந்த 3 ஆண்டுகால ஆட்சியில் செய்த திட்டங்களை கூறி வாக்குசேகரித்து வருகிறோம். நாங்கள்தான் ரூ.1,850 கோடி அளவிலான ஸ்மார்ட் சிட்டி திட்டத்துக்கு ஒப்புதல் பெற்றுள்ளோம்.

குடிநீர் திட்டத்துக்கு ரூ.500 கோடி, சுற்றுலா திட்டத்துக்கு ரூ.200 கோடி, துறைமுக அபிவிருத்தி திட்டத்துக்கு ரூ.64 கோடி, விளையாட்டு துறைக்கு ரூ.30 கோடி என மத்திய மாநில அரசுகள் இணைந்து பல்வேறு திட்டங்களை நிறைவேற்றி வருகிறோம்.

எங்கள் ஆட்சி காலத்தில் புதுவை மாநிலத்தின் வளர்ச்சி 11 சதவீதமாக உள்ளது. ஆனால் மத்திய அரசின் வளர்ச்சி 5 சதவீதமாகத்தான் உள்ளது. இந்தியாவில் எந்த மாநிலத்திலும் இல்லாத அளவுக்கு விவசாயிகளுக்கு ஹெக்டேருக்கு ரூ.25 ஆயிரம் மானியம் தருகிறோம். மற்ற மாநிலங்களில் ரூ.10 ஆயிரம்தான் தருகின்றனர்.

உதவித்தொகைகளை முறையாக காலத்தோடு வழங்கி வருகிறோம். சென்டாக் கல்வி உதவித்தொகையும் வழங்கப்பட்டுள்ளது. காவல்துறை, ஆசிரியர்கள், செவிலியர்கள் தேர்வு நடைபெற உள்ளது. புதுவை கவர்னரின் தொல்லைகளை மீறி 11 சதவீதம் வளர்ச்சியை பெற்றுள்ளோம்.

சட்டம் ஒழுங்கு, விவசாயம், நிர்வாகம், சுகாதாரம் ஆகியவற்றில் முதல் இடத்தில் உள்ளோம். உயர்கல்வியில் 5-வது இடத்தில் இருக்கிறோம். ஆனால் எதிர்க்கட்சி தலைவர் ரங்கசாமி தேர்தல் பிரசாரத்தின்போது இந்த ஆட்சியில் ஒன்றும் நடக்கவில்லை. ஆட்சி மாற்றத்துக்கு எங்களுக்கு வாக்களியுங்கள் என்று கூறி வாக்குசேகரித்து வருகிறார். நெல்லித்தோப்பு இடைத்தேர்தலின்போதும் இதையேதான் கூறினார்.

அப்போது என்.ஆர்.காங்கிரஸ் கூட்டணிக்கு மக்கள் மரண அடி கொடுத்தனர். நாடாளுமன்ற தேர்தலிலும், தட்டாஞ்சாவடி தொகுதி இடைத்தேர்தலிலும் இதே பிரசாரத்தையே மேற்கொண்டார். இரண்டிலும் நாங்களே வெற்றிபெற்றோம். ரங்கசாமியை பற்றி அவரது கட்சியை சேர்ந்த முன்னாள் எம்.எல்.ஏ. நேருவே குற்றச்சாட்டுகளை கூறியுள்ளார்.

ரங்கசாமி கட்சியை வளர்க்கவில்லை. கட்சிக்கு நிர்வாகிகளை நியமிக்கவில்லை. ஆட்சியை கவிழ்க்கும் வேலையைத்தவிர வேறு ஒன்றையும் செய்யவில்லை. சட்ட சபைக்கு சென்று பேசவில்லை என்று அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை கூறியுள்ளார். எதிர்க்கட்சி என்றால் மக்களுக்காக போராடவேண்டும். சட்டமன்றத்துக்கு வந்து அரசை எதிர்த்து கேள்வி கேட்கவேண்டும்.

ஆனால் ரங்கசாமி சட்டமன்றத்துக்கு வரமாட்டார். ஏனெனில் அவரது ஆட்சிக்காலத்தில் நடந்த முறைகேடுகளை நாங்கள் கேட்டுவிடுவோம் என்பதற்காகத்தான். அவர் ஆட்சியில் இருந்தபோது அரசு நிறுவனங்களில் தேவையில்லாமல் ஆட்களை நியமித்ததால் இப்போது 3 ஆயிரம் பேர் ரோட்டில் நிற்கின்றனர்.

கடந்த 3 ஆண்டு காலத்தில் 3 நாட்கள்தான் அவர் சட்டசபைக்கு வந்தார். அவர் மக்களுக்காக ஏதேனும் போராட்டம் நடத்தி இருப்பாரா? தனது கட்சியில் இருப்பவர்கள் ஓடிவிடக்கூடாது என்பதற்காக ஆட்சி மாற்றம் கொண்டுவருவதாக பேசி வருகிறார். அதை மக்கள் நம்ப தயாராக இல்லை.

இவ்வாறு நாராயணசாமி கூறினார்.

சீன அதிபர் தமிழகம் வருவது குறித்து நிருபர்கள் எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்த முதல்-அமைச்சர் நாராயணசாமி, சீன அதிபர் தமிழகத்துக்கு வருவது பெருமையானது என்று குறிப்பிட்டார்.

Next Story