விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலில் பயன்படுத்த மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களை கணினி மூலம் ஒதுக்கீடு செய்யும் பணி - கலெக்டர் தொடங்கி வைத்தார்


விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலில் பயன்படுத்த மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களை கணினி மூலம் ஒதுக்கீடு செய்யும் பணி - கலெக்டர் தொடங்கி வைத்தார்
x
தினத்தந்தி 9 Oct 2019 10:45 PM GMT (Updated: 9 Oct 2019 8:29 PM GMT)

விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலில் பயன்படுத்த மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களை கணினி மூலம் ஒதுக்கீடு செய்யும் பணியை கலெக்டர் சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார்.

விழுப்புரம், 

விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் வருகிற 21-ந் தேதி நடைபெற உள்ளது. இதற்காக 275 வாக்குச்சாவடி மையங்களுக்கு அனுப்பப்பட வேண்டிய மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களை கணினி மூலம் ஒதுக்கீடு செய்யும் பணி நேற்று காலை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது.

இதில் தேர்தல் பொது பார்வையாளர் சினுவீரபத்ருடு மற்றும் அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் மாவட்ட கலெக்டர் சுப்பிரமணியன், இப்பணியை தொடங்கி வைத்து தேர்தலில் பயன்படுத்துவதற்காக மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களை கணினி மூலம் ஒதுக்கீடு செய்தார்.

அதன்படி தொகுதியில் உள்ள 275 வாக்குச்சாவடி மையங்களில் பயன்படுத்த 344 மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களும், 344 கட்டுப்பாட்டு கருவிகளும், யாருக்கு வாக்களித்தோம் என்பதை உறுதி செய்யும் 358 வி.வி.பேட் கருவிகளும் ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதுகுறித்து மாவட்ட கலெக்டர் சுப்பிரமணியன், நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

விக்கிரவாண்டி தொகுதியில் உள்ள அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும் தேர்தலின்போது வாக்குப்பதிவிற்கு பயன்படுத்துவதற்காக தற்போது மின்னணு வாக்கு எந்திரங்கள் கணினி மூலம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

தேர்தலுக்காக எந்தெந்த எந்திரங்கள் பயன்படுத்தப்படுகிறது என்ற விவரத்திற்கான படிவத்தை வேட்பாளர்களின் சார்பில் வந்துள்ள கட்சி பிரதிநிதிகளுக்கும் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளை சேர்ந்த பிரதிநிதிகளுக்கும் வழங்கப்பட்டுள்ளது. அதை அவர்கள் சரிபார்த்துக்கொள்ளலாம். இன்னும் ஒரு வாரம் கழித்து எந்தெந்த எந்திரங்கள் எந்தெந்த வாக்குச்சாவடி மையங்களுக்கு அனுப்புவது என்று முடிவு செய்யப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

அப்போது கூடுதல் ஆட்சியர் ஸ்ரேயா பி.சிங், உதவி கலெக்டர் (பயிற்சி) சிவகிருஷ்ணமூர்த்தி, விக்கிரவாண்டி தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் சந்திரசேகர், மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் ஜெயக்குமார், தேர்தல் தனி தாசில்தார் சீனிவாசன் மற்றும் அரசியல் கட்சியினர் பலர் உடனிருந்தனர்.

Next Story