மாவட்டம் முழுவதும் பெய்யும் மழைநீரை சேமித்தால் குடிநீர் பற்றாக்குறையை தவிர்க்கலாம் - கலெக்டர் சண்முகசுந்தரம் பேச்சு


மாவட்டம் முழுவதும் பெய்யும் மழைநீரை சேமித்தால் குடிநீர் பற்றாக்குறையை தவிர்க்கலாம் - கலெக்டர் சண்முகசுந்தரம் பேச்சு
x
தினத்தந்தி 9 Oct 2019 10:30 PM GMT (Updated: 9 Oct 2019 8:30 PM GMT)

வேலூர் மாவட்டம் முழுவதும் பெய்யும் மழைநீரை சேமித்தால் 3 ஆண்டுகளுக்கு குடிநீர் பற்றாக்குறையை தவிர்க்கலாம் என்று கலெக்டர் சண்முகசுந்தரம் கூறினார்.

வேலூர், 

வேலூர் மாவட்ட ரெட்கிராஸ் சங்கம் சார்பில் ஜெனிவா ஒப்பந்த தினம் 70-வது ஆண்டு விழா வேலூர் ரெட்கிராஸ் சங்க அலுவலகத்தில் நேற்று நடந்தது. வேலூர் ரெட்கிராஸ் சங்க தலைவர் பர்வதா தலைமை தாங்கினார். துணைத்தலைவர் வெங்கடசுப்பு முன்னிலை வகித்தார். செயலாளர் இந்தர்நாத் வரவேற்றார்.

இதில், சிறப்பு அழைப்பாளராக ரெட்கிராஸ் சங்க மாவட்ட தலைவரும், கலெக்டருமான சண்முகசுந்தரம் கலந்து கொண்டு ஜெனிவா ஒப்பந்த தினத்தையொட்டி நடந்த பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு பரிசுகள் மற்றும் ஏழை, எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கி் பேசியதாவது:-

வேலூர் மாவட்ட ரெட்கிராஸ் சங்கம் சார்பில் 2 இலவச மருத்துவமனையும், முதியோர் இல்லமும் பராமரிக்கப்பட்டு வருகிறது. மேலும் மாவட்டம் முழுவதும் இலவச மருத்துவ முகாம், ரத்ததான முகாம், கண்பரிசோதனை முகாம், முதலுதவி பயிற்சி மற்றும் மீட்கப்பட்ட ெகாத்தடிமைகளுக்கு நலத்திட்ட உதவிகள் உள்பட பல்வேறு பணிகள் சிறப்பாக செய்யப்பட்டு வருகிறது. இந்த சங்கத்தில் நானும் உறுப்பினராக இருப்பதில் பெருமை கொள்கிறேன்.

தமிழக அரசு தற்போது குடிமராமத்து பணிகளை மேற்கொண்டு வருகிறது.வேலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து நீர்நிலைகளும் தூர்வார நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. நமது மாவட்டத்தில் பெய்யும் மழைநீரை சேமித்தால் 3 ஆண்டுகளுக்கு குடிநீர் பற்றாக்குறையை தவிர்க்கலாம். ஆகவே நீர்நிலைகளை பாதுகாக்க இளைய தலைமுறையினர் தங்கள் பங்களிப்பை வழங்க வேண்டும்.

இந்தியாவில் உள்ள மாநிலங்களில் தமிழகம், மராட்டியம் முன்னேறிய மாநிலங்களாக காணப்படுகின்றன. ஆனாலும் தமிழகத்தில் 34 சதவீத குழந்தைகள் ஊட்டச்சத்து குறைபாட்டால் பிறக்கின்றன. தமிழக அரசு பல்வேறு திட்டங்கள் மூலம் கர்ப்பிணிகளுக்கு சத்தான உணவு வகைகளை வழங்கி வருகிறது. ஆனாலும் இயற்கையாக கிடைக்கக்கூடிய பழங்கள், காய்கறிகளை சாப்பிடாததால் அவர்களுக்கு ஊட்டச்சத்து குறைபாடு ஏற்படுகிறது.

இதனை போக்க மாவட்ட நிர்வாகம் சார்பில் அனைத்து ஊராட்சிகளிலும் சுமார் 4 லட்சம் மரக்கன்றுகள் நடும் பணி சில நாட்களில் தொடங்கப்பட உள்ளது. ரெட்கிராஸ் சங்கம் சார்பில் 1 லட்சம் மரக்கன்றுகள் நடப்படும். இந்த மரக்கன்றுகளை அருகே உள்ள பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள், கிராமமக்கள் பராமரிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

தொடர்ந்து மாவட்டத்தில் சிறப்பாக செயல்பட்ட காட்பாடி ரெட்கிராஸ் சங்கம் உள்பட பல்வேறு சங்கங்களுக்கு சான்றிதழ், பரிசு வழங்கப்பட்டது. இதில், பல்வேறு பள்ளிகளை சேர்ந்த ரெட்கிராஸ் மாணவ-மாணவிகள், ரெட்கிராஸ் சங்க நிர்வாகிகள் மற்றும் பலர் கலந்து கொண்டனர். முடிவில் சங்க பொருளாளர் பாஸ்கரன் நன்றி கூறினார்.

Next Story