நவராத்திரி நிறைவு விழாவையொட்டி 10 கோவில்களின் உற்சவ மூர்த்திகளுக்கு சிறப்பு பூஜை


நவராத்திரி நிறைவு விழாவையொட்டி 10 கோவில்களின் உற்சவ மூர்த்திகளுக்கு சிறப்பு பூஜை
x
தினத்தந்தி 9 Oct 2019 10:30 PM GMT (Updated: 9 Oct 2019 9:17 PM GMT)

நவராத்திரி நிறைவு விழாவையொட்டி கிருஷ்ணகிரியில் 10 கோவில்களின் உற்சவ மூர்த்திகள் ஒரே இடத்தில் நிறுத்தப்பட்டு சிறப்பு பூஜை நடைபெற்றது. இதை திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

கிருஷ்ணகிரி,

கிருஷ்ணகிரியில் நவராத்திரி விழாவையொட்டி கோவில்களில் கொலு பொம்மைகள் வைத்து நவராத்திரி விழா கொண்டாடப்பட்டது. அதனை தொடர்ந்து அனைத்து உற்சவ மூர்த்திகளுக்கும் சிறப்பு அலங்காரம் செய்து தினமும் பூஜைகள் செய்து வந்தனர். நவராத்திரி நிறைவு விழாவையொட்டி நேற்று காலை வன்னி மரம் வெட்டும் நிகழ்ச்சி நடந்தது.

விழாவையொட்டி நேற்று முன்தினம் இரவு முதல் பழையப்பேட்டை பகுதியில் உள்ள லட்சுமி நாராயண சாமி, சீனிவாச பெருமாள், காட்டிநாயனப்பள்ளி முருகர், தஞ்சாவூர் மாரியம்மன், கவீஸ்வரர், கிருஷ்ணகிரி புதுப்பேட்டையில் உள்ள கிருஷ்ணர், படவட்டம்மாள், காமாட்சியம்மன், ஞான விநாயகர், கல்கத்தா காளி ஆகிய 10 கோவில்களில் இருந்து உற்சவமூர்த்திகள் சிறப்பு அலங்காரத்தில் தேர்வீதி உலா நடந்தது.

சாமிகளுக்கு சிறப்பு பூஜை

இந்த அனைத்து தேர்களும் நேற்று அதிகாலை கிருஷ்ணகிரி பழையப்பேட்டையை வந்தடைந்தது. இதையடுத்து நேற்று காலை 7 மணிக்கு அனைத்து தேர்களும் ஒன்றாக சேர்ந்து பழையப்பேட்டை காந்தி சிலை ஒரே இடத்தில் கிழக்கு நோக்கி நிறுத்தப்பட்டது. பின்னர் சாமிகளுக்கு தீபாராதனை செய்யப்பட்டு, வன்னி மரம் வெட்டும் நிகழ்ச்சியும், சாமிகளுக்கு சிறப்பு பூஜைகளும் நடைபெற்றது.

இதில் கிருஷ்ணகிரி மட்டுமின்றி, சுற்றுவட்டார பகுதிகளில் இருந்தும், ஆந்திரா, கர்நாடக மாநிலங்களில் இருந்தும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இந்த நிகழ்ச்சியில் வன்னி மரத்தின் இலைகளை எடுத்து சென்று வீட்டில் வைத்தால் செல்வம் செழிக்கும் என்பது ஐதீகமாக உள்ளது. இதனால் வன்னி மரத்தின் இலைகளை பெற கூட்டம் அலைமோதியது. 

Next Story