கடை உரிமையாளரை ஏமாற்றி ரூ.1.65 கோடி நகைகளுடன் மாயமான 2 ஏஜெண்டுகள் சிக்கினர்


கடை உரிமையாளரை ஏமாற்றி ரூ.1.65 கோடி நகைகளுடன் மாயமான 2 ஏஜெண்டுகள் சிக்கினர்
x
தினத்தந்தி 9 Oct 2019 11:34 PM GMT (Updated: 9 Oct 2019 11:34 PM GMT)

நகைக்கடை உரிமையாளரை ஏமாற்றி ரூ.1.65 கோடி நகைகளுடன் மாயமான 2 ஏஜெண்டுகளை போலீசார் கைது செய்தனர்.

மும்பை,

மும்பை வில்லேபார்லே பகுதியை சேர்ந்தவர்கள் ஹஸ்முக் (வயது44), மனோஜ் (32). இவர்கள் 2 பேரும் ஏஜெண்டுகள். இவர்கள் கடந்த பிப்ரவரி மாதம் ஜவேரி பஜாரில் உள்ள நகைக்கடை ஒன்றில் அதன் உரிமையாளரை சந்தித்து பேசி உள்ளனர்.

இதில் தாங்கள் நகைகளை விற்று பணம் தருவதாக கூறி ரூ.1 கோடியே 65 லட்சம் அளவில் நகைகளை கேட்டனர். ஏற்கனவே இவர்கள் நகைகளை விற்று பணம் கொடுத்து வந்ததால் அவர்களை நம்பிய உரிமையாளர், ஏஜெண்டுகள் கேட்ட நகைகளை கொடுத்து அனுப்பி உள்ளார்.

2 பேர் சிக்கினர்

ஆனால் 2 மாதங்கள் ஆகியும் அவர்கள் நகைகளுக்கான பணத்தை கொடுக்கவில்லை. மேலும் அவர்களை தொடர்பு கொள்ள முயன்ற போது முடியாமல் போனது. இதனால் அதிர்ச்சி அடைந்த நகைக்கடை உரிமையாளர் சம்பவம் குறித்து எல்.டி. மார்க் போலீசில் புகார் அளித்தார்.

இந்த புகாரின்பேரில் போலீசார் கடந்த ஏப்ரல் மாதம் வழக்குப்பதிவு செய்து நகைகளுடன் மாயமான 2 பேரையும் தேடியும் வந்தனர்.

இந்தநிலையில் நேற்று முன்தினம் அவர்கள் 2 பேரும் வில்லேபார்லேவிற்கு வந்து இருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார் அங்கு சென்று ஹஸ்முக், மனோஜ் ஆகிய 2 பேரையும் கைது செய்தனர். மேலும் அவர்களை கோர்ட்டில் ஆஜர்படுத்தி போலீஸ் காவலில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story