வீட்டில் பணமழை பெய்ய வைப்பதாக கூறி தொழில் அதிபரிடம் ரூ.8 லட்சம் மோசடி மந்திரவாதி உள்பட 2 பேர் கைது


வீட்டில் பணமழை பெய்ய வைப்பதாக கூறி தொழில் அதிபரிடம் ரூ.8 லட்சம் மோசடி மந்திரவாதி உள்பட 2 பேர் கைது
x

வீட்டில் பணமழை பெய்ய வைப்பதாக கூறி தொழில் அதிபரிடம் ரூ.8 லட்சம் மோசடி செய்த மந்திரவாதி உள்பட 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

மும்பை,

மும்பை செம்பூரை சேர்ந்தவர் பரத்பாய். தொழில் அதிபரான இவர் சம்பவத்தன்று நாசிக் சென்றிருந்தார். அங்கு சந்தோஷ் சவான் (வயது 40) என்ற நபரின் அறிமுகம் அவருக்கு கிடைத்தது. தனது வீட்டில் நடந்து வரும் பிரச்சினை குறித்து விவாதித்தார். இதற்கு சந்தோஷ் சவான் தனது குருவான மந்திரவாதி தயானந்த் மோரே (49) என்பவரை சந்தித்தால் உங்கள் பிரச்சினைகளில் இருந்து விடுபட்டு விடலாம் என தெரிவித்தார்.

இதனை நம்பிய பரத்பாய் அங்கு சென்று உள்ளார். இதற்கு மந்திரவாதி உனது வீட்டில் சிறப்பு பூஜை செய்தால் எனது மந்திரசக்தியால் பணமழை பெய்ய வைப்பதாக ஆசை வார்த்தை கூறியுள்ளார்.

மந்திரவாதி கைது

இதனை நம்பிய பரத்பாய் அவரை செம்பூரில் உள்ள வீட்டிற்கு அழைத்து சென்று சிறப்பு பூஜை நடத்தி உள்ளார். மேலும் இதற்காக ரூ.8 லட்சத்தை அவரிடம் கொடுத்து உள்ளார்.

நாளடைவில் அவரது வீட்டில் பணமழை பெய்யாததால் நாசிக் சென்று மந்திரவாதியை சந்தித்து விவரம் கேட்டு உள்ளார். இதற்கு பல பேரிடம் சென்று கூறியதால் பணமழை பெய்யவில்லை என மழுப்பலான பதிலை மந்திரவாதி தெரிவித்து உள்ளார். இதனால் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த அவர் சம்பவம் குறித்து போலீசில் புகார் அளித்தார். இந்த புகாரின் படி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

இதையடுத்து போலீசார் சிறப்பு பூஜை நடத்துவதாக கூறி மும்பைக்கு சந்தோஷ் சவான் மற்றும் மந்திரவாதியை அழைத்து உள்ளனர். இதனை நம்பி மும்பைக்கு வந்த அவர்கள் 2 பேரையும் நேற்று முன்தினம் போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்களை கோர்ட்டில் ஆஜர்படுத்தி போலீஸ் காவலில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story