வடக்களூர் சிவயோக நாராயண பெருமாள் திருக்கல்யாண உற்சவம் திரளான பக்தர்கள் தரிசனம்


வடக்களூர் சிவயோக நாராயண பெருமாள் திருக்கல்யாண உற்சவம் திரளான பக்தர்கள் தரிசனம்
x
தினத்தந்தி 10 Oct 2019 10:30 PM GMT (Updated: 10 Oct 2019 3:43 PM GMT)

வடக்களூரில் உள்ள சிவயோக நாராயண பெருமாள் கோவிலில் நடைபெற்ற திருக்கல்யாண உற்சவத்தில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

ஆவுடையார்கோவில்,

புதுக்கோட்டை மாவட்டம், ஆவுடையார்கோவில் வடக்களூர் கிராமத்தில் திருவாவடுதுறை ஆதீனத்திற்கு சொந்தமான ஸ்ரீ தேவி பூதேவி சமேத சிவயோக நாராயண பெருமாள் கோவில் உள்ளது. இக்கோவிலின் பிரம்மோற்சவ விழா கடந்த மாதம் 30-ந் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. தொடர்ந்து விழாவின் முக்கிய நிகழ்ச்சியான திருக்கல்யாண உற்சவம் நேற்று முன்தினம் நடைபெற்றது. இதையொட்டி ஸ்ரீ தேவி பூதேவி சமேத சிவயோக நாராயண பெருமாள் பொட்டலில் உள்ள மண்டபத்திற்கு சிறப்பு அலங்காரத்தில் மணக்கோலத்தில் எழுந்தருளினர். இதையடுத்து வடக்களூர் கிராம மக்கள் சார்பில், ஆதிகைலாசநாதர் கோவிலில் இருந்து பூ, பழம், வெற்றிலை பாக்கு, பட்டு வேட்டி, சேலை உள்ளிட்ட சீர்வரிசை பொருட்கள் ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு மண்டபத்தில் வைக்கப்பட்டது.

திருக்கல்யாண உற்சவம்

இதைத்தொடர்ந்து மாங்கல்ய பூஜை நடத்தப்பட்டு, தாம்பூலத்தட்டில் வைத்து மாங்கல்யம் காண்பிக்கப்பட்டது. பின்னர் மேள, தாளம் முழங்க ஸ்ரீ தேவி பூதேவி சமேத சிவயோக நாராயண பெருமாள் திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது. அப்போது பக்தர்கள் மலர்களை தூவினர். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பின்னர் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை வடக்களூர் கிராம மக்கள் செய்திருந்தனர்.


Next Story