தொழிற்சாலையில் வேலை வழங்கக்கோரி கலெக்டர் அலுவலகம் முற்றுகை


தொழிற்சாலையில் வேலை வழங்கக்கோரி கலெக்டர் அலுவலகம் முற்றுகை
x
தினத்தந்தி 10 Oct 2019 10:45 PM GMT (Updated: 10 Oct 2019 6:28 PM GMT)

தொழிற்சாலையில் வேலை வழங்கக்கோரி கலெக்டர் அலுவலகம் முற்றுகையிடப்பட்டது.

திருவள்ளூர்,

திருவள்ளூர் கலெக்டர் அலுவலகத்தை நேற்று திருவள்ளூரை அடுத்த கடம்பத்தூர் ஒன்றியம் மேல்நல்லாத்தூர், அதிகத்தூர், கீழ்நல்லாத்தூர், வெங்கத்தூர், கண்டிகை போன்ற பகுதிகளை சேர்ந்த இளைஞர்கள் முற்றுகையிட்டு கண்டன கோஷங் களை எழுப்பினார்கள். பின் னர் அவர்கள் திருவள்ளூர் மாவட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சி செய்தி தொடர்பு மைய அமைப்பாளர் தமிழ்வளவன் தலைமையில் மாவட்ட கலெக்டர் மகேஸ்வரி ரவிக்குமாரிடம் புகார் மனுவை அளித்தனர்.

அந்த மனுவில் அவர்கள் கூறியிருப்பதாவது:-

நாங்கள் மேற்கண்ட கிராமங்களில் நிரந்தரமாக வசித்து வருகிறோம். அதிகத்தூரில் தனியார் கார் நிறுவனம் சுமார் 20 ஆண்டுகளுக்கு மேலாக செயல்பட்டு வருகிறது.

தற்போது அந்த தொழிற்சாலையை பிரான்ஸ் நாட்டு நிறுவனத்திற்கு விற்பனை செய்து விட்டனர். தற்போது அந்த பன்னாட்டு நிறுவனம் எங்கள் கிராமத்திற்கு சொந்தமான பெரிய ஏரியின் குறுக்கே பொதுப்பணித்துறையின் அனுமதியுடன் மேம்பாலம் அமைத்து போக்குவரத்திற்கு சாலை வசதியை ஏற்படுத்தி வருகின்றனர். இதில் எங்களுக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை. ஆனால் அதே நேரத்தில் எங்கள் கிராமத்தில் படித்த பட்டதாரி இளைஞர்கள் 300-க்கும் மேற்பட்டவர்கள் வேலையில்லாமல் இருந்து வருகிறோம்.

எனவே மேற்கண்ட பன்னாட்டு நிறுவனம் அந்த கார் தொழிற்சாலையில் எங்கள் பகுதியை சேர்ந்த படித்த வேலையில்லா இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கினால் அவர்களின் வாழ்க்கை தரம் உயரும். எனவே படித்த இளைஞர்களுக்கு வேலை பெற்றுத்தர ஆவன செய்யுமாறு அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது.

மனுவை பெற்றுக்கொண்ட கலெக்டர் அதன் மீது தக்க நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார்.

Next Story