சீர்காழி அருகே எடமணல் கிராமத்தில் வெட்டிவேர் அறுவடை பணி தீவிரம்


சீர்காழி அருகே எடமணல் கிராமத்தில் வெட்டிவேர் அறுவடை பணி தீவிரம்
x
தினத்தந்தி 10 Oct 2019 10:45 PM GMT (Updated: 10 Oct 2019 6:37 PM GMT)

சீர்காழி அருகே எடமணல் கிராமத்தில் வெட்டிவேர் அறுவடை பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

சீர்காழி,

நாகை மாவட்டம், சீர்காழி அருகே எடமணல் கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் பெரும்பாலான மக்கள், விவசாயத்தை நம்பியே உள்ளனர். இந்த நிலையில் எடமணல் கிராமத்தை சேர்ந்த விவசாயி ராஜசேகர் என்பவர், 1 ஏக்கர் பரப்பளவில் வெட்டிவேர் சாகுபடி செய்துள்ளார். தற்போது வெட்டிவேர் அறுவடை பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இவர் கடந்த 10 ஆண்டுகளாக வெட்டிவேர் சாகுபடி செய்யும் பணியில் ஈடுபட்டு வருகிறார்.

இதுகுறித்து விவசாயி கூறியதாவது:-

90 நாள் பயிர்

வெட்டிவேர் சிவனின் ஜடாமுடி போன்று காணப்படும். வெட்டிவேர் சிவபெருமான், பெருமாள் என அனைத்து சாமிகளுக்கும் மிகவும் உகந்தது. வெட்டிவேரை கொண்டு சென்று வழிபட்டால் எல்லா வளமும் கிடைக்கும் என்பது ஐதீகம். பல லட்சம் ரூபாய்க்கு மலர்கள் வாங்கி கொடுத்து இறைவனை வழிபாடு செய்தாலும் வெட்டிவேருக்கு என தனிமவுசு உண்டு. குளிர்ச்சி மற்றும் மூலிகை தன்மை வாய்ந்த வெட்டிவேர் 90 நாள் பயிராகும்.

சாகுபடி செய்யும்போது முதலில் வெட்டிவேரின் முதல்பருவமான செடியின் தண்டை முறையாக பிரித்து எடுத்து பதியம் இடுகின்றனர். அதன்பின்னர் 15 முதல் 20 நாள் சென்று நிலத்தின் கீழே கடலை புண்ணாக்கு 1 பாத்திக்கு 6 கிலோ வரை வைத்து மண்ணை அணைக்க வேண்டும். இதனையடுத்து 20 நாட்களுக்கு பின்னர் மீண்டும் இதுபோல் புண்ணாக்கு வைத்து மண்ணை அணைத்து மூடி பதமாக தண்ணீர் தேக்கி வைக்க வேண்டும்.

1 கிலோ ரூ.150-க்கு விற்பனை

வெட்டிவேர் தெய்வீக தன்மை உடையதாக இருப்பதால் சாகுபடி மேற்கொள்ளும் அந்த பகுதி முழுவதும் யாரும் காலணிகள் அணிந்து வர அனுமதிப்பதில்லை. இவ்வாறு சாகுபடி செய்த 90 நாட்களில் அறுவடைக்கு தயாரான வெட்டிவேரை மண்ணை பள்ளமாக வெட்டி கொஞ்சம், கொஞ்சமாக தண்ணீரை ஊற்றி ஊர வைத்து வெட்டிவேரை வெளியே எடுக்க வேண்டும். அப்போது அந்த பகுதி முழுவதும் வெட்டிவேரின் மனம் வீசும். இங்கு சாகுபடி செய்யப்படும் வெட்டிவேர் திருப்பதி ஏழுமலையான் சாமிக்கு 2 மாதத்திற்கு 1 முறை வியாபாரிகள் மூலம் கொண்டு சேர்க்கப்பட்டு அலங்காரம் செய்யப்படுகிறது.

இதேபோல் சிதம்பரம் நடராஜர் பெருமானுக்கு நடைபெறும் ஆனி திருமஞ்சனம், ஆருத்ரா தரிசனம் உள்ளிட்ட விழா காலங்களில் தில்லைமங்கலம் வெட்டிவேர்தான் சாத்தப்படுகிறது. பழனி, காஞ்சீபுரம், சமயபுரம் போன்ற பிரசித்தி பெற்ற கோவில்களுக்கு வாங்கி செல்லப்படுகிறது. மேலும் பூக்கடைகளுக்கும், ஊதுபத்தி, வாசனை திரவியம் தயார் செய்யவும் வெட்டிவேரை பல்வேறு பகுதிகளில் இருந்து வந்து வியாபாரிகள் வாங்கி செல்கின்றனர். 1 கிலோ வெட்டிவேர் ரூ.150-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.


Next Story