சீன அதிபர் - பிரதமர் மோடி வருகை மாமல்லபுரத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகளை எடப்பாடி பழனிசாமி பார்வையிட்டார்


சீன அதிபர் - பிரதமர் மோடி வருகை மாமல்லபுரத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகளை எடப்பாடி பழனிசாமி பார்வையிட்டார்
x
தினத்தந்தி 10 Oct 2019 11:00 PM GMT (Updated: 10 Oct 2019 7:16 PM GMT)

சீன அதிபர்- பிரதமர் மோடி வருகையையொட்டி மாமல்லபுரத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகளை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பார்வையிட்டார்.

மாமல்லபுரம்,

சீன அதிபர் ஜின்பிங், பிரதமர் நரேந்திரமோடி இன்று (வெள்ளிக்கிழமை) அரசு முறை பயணமாக மாமல்லபுரம் வருகின்றனர்.

தமிழக அரசு சார்பில் அவர்களுக்கு அளிக்கப்பட உள்ள வரவேற்பு முன்னேற்பாடுகள், இரு தலைவர்கள் வருகையையொட்டி தமிழக அரசு சார்பில் மேற்கொள்ளப்பட்ட சாலை அமைத்தல், சுகாதாரம் உள்ளிட்ட அடிப்படை திட்டப்பணிகள் குறித்து முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை-முதல் அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் தலைமை செயலாளர் சண்முகம், டி.ஜி.பி. திரிபாதி, அமைச்சர்கள் தங்கமணி, விஜயபாஸ்கர், காமராஜ் ஆகியோர் மாமல்லபுரத்திற்கு நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

அர்ச்சுனன் தபசு, கடற்கரை கோவில், ஐந்துரதம், வெண்ணை உருண்டை கல் போன்ற இடங்களுக்கு சென்று இரு நாட்டு தலைவர்கள் பார்வையிட உள்ள இடங்களை அதிகாரிகளுடன் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து டி.ஜி.பி. திரிபாதி மற்றும் காவல்துறை உயரதிகாரிகளுடன் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி மாமல்லபுரம் சுற்றுலா வளர்ச்சிக்கழக ஓட்டலில் ஆலோசனை நடத்தினார்.

முதல்-அமைச்சருடன் காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் பொன்னையா, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கண்ணன், அ.தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் திருக்கழுக்குன்றம் எஸ்.ஆறுமுகம், வாலாஜாபாத் கணேசன், முன்னாள் எம்.பி. மரகதம் குமரவேல், மாமல்லபுரம் புதுநகர் வளர்ச்சிக்குழும உறுப்பினர் ஏ.கணேசன் மற்றும் பலர் வந்திருந்தனர்.

இரு நாட்டு தலைவர்கள் வருகையையொட்டி மாமல்லபுரத்தில் குவிந்துள்ள போலீசார் தங்குவதற்காக மாமல்லபுரம் நகர் பகுதியில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் இன்று உள்ளூர் விடுமுறை விடப்பட்டுள்ளது.

மாமல்லபுரம் தெருக்களில் சுற்றித்திரிந்த மனநோயாளிகளை மாமல்லபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவிக்குமார் தலைமையிலான போலீசார் பிடித்து ஒரு வேனில் ஏற்றி அவர்களுக்கு உணவு, புத்தாடைகள் வழங்கி சென்னையில் உள்ள மனநல காப்பகத்தில் விடுவதற்கு அழைத்துச் சென்றனர்.

நேற்று மத்திய அரசு உயரதிகாரிகள் குழுவினர் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆய்வு செய்தனர். தமிழக அரசு சார்பில் அமைச்சர்கள் விஜயபாஸ்கர், காமராஜ், கலெக்டர் பொன்னையா ஆகியோரும் வரவேற்பு ஏற்பாடுகள் குறித்து ஆய்வு செய்தனர். மாமல்லபுரம் நகரம் முழுவதும் ஆங்காங்கு மோப்ப நாய்கள் மூலம் போலீசார் தீவிர சோதனை மேற்கொண்டனர்.

பிரதமர் மோடி- சீன அதிபர் பயணிக்கும் குண்டு துளைக்காத காரின் சோதனை ஓட்டம் சென்னை முதல் மாமல்லபுரம் வரை நடந்தது. மாமல்லபுரம் கடற்கரை கோவில், ஐந்துரதம், அர்ச்சுனன் தபசு, வெண்ணை உருண்டை கல் உள்ளிட்ட பகுதிகளில் கார் சோதனை ஓட்டம் நடந்தது. இதனால் மாமல்லபுரம் நகருக்குள் சுமார் 6 மணி நேரம் போக்குவரத்து முடக்கப்பட்டது. இதனால் பள்ளி மாணவர்கள் கடும் அவதிக்குள்ளானார்கள்.

Next Story