உளுந்தூர்பேட்டை அருகே, தொழிலாளி தீக்குளித்து தற்கொலை - மது குடிக்க மனைவி பணம் கொடுக்காததால் விரக்தி


உளுந்தூர்பேட்டை அருகே, தொழிலாளி தீக்குளித்து தற்கொலை - மது குடிக்க மனைவி பணம் கொடுக்காததால் விரக்தி
x
தினத்தந்தி 10 Oct 2019 10:45 PM GMT (Updated: 10 Oct 2019 8:47 PM GMT)

உளுந்தூர்பேட்டை அருகே மது குடிக்க மனைவி பணம் கொடுக்காத விரக்தியில் தொழிலாளி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.

உளுந்தூர்பேட்டை, 

உளுந்தூர்பேட்டை அருகே உள்ள அயன்வேலூர் கிராமத்தை சேர்ந்தவர் குப்புசாமி மகன் சுந்தரபாண்டி (வயது 30), தொழிலாளி. குடிப்பழக்கம் உடைய இவர் தினசரி மது குடித்து விட்டு வீட்டுக்கு வந்து அவரது மனைவியுடன் தகராறில் ஈடுபட்டு வந்ததாக தெரிகிறது.

இந்த நிலையில் சம்பவத்தன்று சுந்தரபாண்டி, மது குடிப்பதற்காக தனது மனைவியிடம் பணம் கேட்டுள்ளார். அப்போது அவர் பணம் கொடுக்க மறுத்ததாக கூறப்படுகிறது.

இதில் விரக்தியடைந்த சுந்தரபாண்டி, வீட்டில் இருந்த மண்எண்ணெயை எடுத்து தனது உடலில் ஊற்றி தீ வைத்துக் கொண்டார். இதில் உடல் முழுவதும் தீ பரவி எரிந்ததில் வலியால் அவர் அலறி துடித்தார்.

இந்த சத்தம் கேட்டு வந்த அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் அவர் மேல்சிகிச்சைக்காக புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அங்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி சுந்தரபாண்டி பரிதாபமாக இறந்தார். இதுகுறித்த புகாரின் பேரில் திருநாவலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story