கடலூர் மாவட்டத்தில் தடுப்பு காவல் சட்டத்தில் 2 சாராய வியாபாரிகள் கைது


கடலூர் மாவட்டத்தில் தடுப்பு காவல் சட்டத்தில் 2 சாராய வியாபாரிகள் கைது
x
தினத்தந்தி 10 Oct 2019 10:30 PM GMT (Updated: 10 Oct 2019 8:47 PM GMT)

கடலூர் மாவட்டத்தில் தடுப்பு காவல் சட்டத்தில் 2 சாராய வியாபாரிகள் கைது செய்யப்பட்டனர். இது பற்றிய விவரம் வருமாறு:-

கடலூர், 

பண்ருட்டி மதுவிலக்கு அமல்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் தேவி மற்றும் போலீசார் கடந்த மாதம் 24-ந்தேதி பி.ஆண்டிக்குப்பம் மெயின்ரோட்டில் வாகன தணிக்கை செய்து கொண்டு இருந்தனர். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் 110 லிட்டர் சாராயத்தை கடத்தி வந்த பிஆண்டிகுப்பத்தைச்சேர்ந்த ஏழுமலையை(வயது53) போலீசார் பிடித்து மோட்டார் சைக்கிளுடன் 110 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்தனர். இதன்பிறகு அவரது வீட்டின் பின்புறத்தில் பதுக்கி வைக்கப்பட்டு இருந்த 65 லிட்டர் சாராயத்தையும் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து ஏழுமலையை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி கடலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.

இவர் மீது ஏற்கனவே பண்ருட்டி மதுவிலக்கு அமல் பிரிவு மற்றும் பண்ருட்டி, காடாம்புலியூர் போலீஸ் நிலையங்களில் 12 மதுகடத்தல் வழக்குகள் உள்ளன. எனவே இவரின் குற்ற செய்கையை கட்டுப்படுத்தும் பொருட்டு தடுப்பு காவல் சட்டத்தில் கைது செய்ய உத்தரவிடுமாறு மாவட்ட கலெக்டருக்கு போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீஅபிநவ் பரிந்துரை செய்தார். அதனை ஏற்று கலெக்டர் அன்புசெல்வன் பிறப்பித்த உத்தரவின் பேரில் ஏழுமலையை தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்தனர். இதற்கான உத்தரவு நகலை சிறையில் உள்ள ஏழுமலையிடம் சிறைக்காவலர்கள் மூலம் போலீசார் வழங்கினர்.

இதேப்போல் கடந்த மாதம் 20-ந்தேதி குமந்தான்மேடு சோதனைசாவடியில் கடலூர் மதுவிலக்கு போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டு இருந்த போது அந்த வழியாக பதிவு எண் இல்லாத மொபட்டில் 100 லிட்டர் சாராயத்தை கடத்தி வந்த புதுச்சேரி பெரிய ஆராய்ச்சிக்குப்பத்தைச்சேர்ந்த அய்யப்பன்(20) என்பவரை கைது செய்து கடலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.

இவர் மீது ஏற்கனவே மது கடத்தல் தொடர்பாக கடலூர் மதுவிலக்கு அமல்பிரிவு மற்றும் ரெட்டிச்சாவடி போலீஸ் நிலையங்களில் 10 வழக்குகள் உள்ளன. எனவே மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீஅபிநவ்வின் பரிந்துரையை ஏற்று அய்யப்பனை தடுப்பு காவல் சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைக்குமாறு கலெக்டர் அன்பு செல்வன் உத்தரவிட்டார். அதன்பேரில் அய்யப்பனை தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் கடலூர் மதுவிலக்கு அமல்பிரிவு போலீசார் கைது செய்தனர். இதற்கான உத்தரவு நகலும், சிறை காவலர்கள் மூலம் அய்யப்பனிடம் போலீசார் வழங்கினார்.

Next Story