கூடலூர் அருகே, வேன் மீது லாரி மோதி விபத்து - பெண்கள் உள்பட 27 பேர் படுகாயம்


கூடலூர் அருகே, வேன் மீது லாரி மோதி விபத்து - பெண்கள் உள்பட 27 பேர் படுகாயம்
x
தினத்தந்தி 10 Oct 2019 10:45 PM GMT (Updated: 10 Oct 2019 8:49 PM GMT)

கூடலூர் அருகே வேன் மீது லாரி மோதிய விபத்தில் பெண்கள் உள்பட 27 பேர் படுகாயம் அடைந்தனர்.

கூடலூர்,

கூடலூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் அரசு மற்றும் தனியார் தேயிலை தோட்டங்கள் காணப்படுகின்றன. இந்த தேயிலை தோட்டங்களில் ஏராளமான தொழிலாளர்கள் வேலை பார்த்து வருகின்றனர். இந்த நிலையில் கூடலூர் அருகே நாடுகாணி பகுதியில் இருந்து நேற்று காலை 8.30 மணிக்கு பெண்கள் உள்பட 26 தொழிலாளர்கள் கீழ்நாடுகாணியில் உள்ள தனியார் தேயிலை தோட்டத்துக்கு வேலைக்கு வேனில் புறப்பட்டனர். வேனை பொன்னூரை சேர்ந்த டிரைவர் தருமசீலன்(வயது 25) ஓட்டினார். கீழ்நாடுகாணி பஜாரை கடந்து தனியார் தேயிலை தோட்டம் அருகில் வேன் சென்று கொண்டு இருந்தது. அப்போது வேன் மீது எதிரே வந்த லாரி மோதியது. மோதிய வேகத்தில் வேனின் முன்பக்க கண்ணாடியை உடைத்துக்கொண்டு, பெண் தொழிலாளி ஜானகி(56) சாலையில் வந்து விழுந்து படுகாயம் அடைந்தார்.

மேலும் வேனில் இருந்த கலாவதி(43), சசிகலா(39), பரமேஸ்வரி(48), சரோஜா தேவி(55), வள்ளியம்மாள்(47), பிரியதர்‌ஷினி(30), லோகேஸ்வரி(48), பு‌‌ஷ்பா(48), நாகேஸ்வரி(37), சந்திரா மலர்(34), சிந்தாமணி(55), ராஜலட்சுமி(52), தியாகராஜன்(35) மற்றும் டிரைவர் தருமசீலன் உள்பட 26 பேருக்கு படுகாயம் ஏற்பட்டது. உடனே அக்கம்பக்கத்தினர் அனைவரையும் மீட்டு கூடலூர் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அதில் ஜானகி மேல்சிகிச்சைக்காக கேரள மாநிலம் மேப்பாடியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார். சிந்தாமணி, ராஜலட்சுமி, தியாகராஜன் மற்றும் டிரைவர் தருமசீலன் ஆகியோர் ஊட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. விபத்து காரணமாக அந்த வழியே போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மேலும் லாரி மற்றும் வேனின் முன்பகுதி சேதம் அடைந்தது. அதன்பின்னர் தேவாலா போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து போக்குவரத்தை சரி செய்தனர். மேலும் விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story