ஈரோட்டில், சாலை மறியலில் ஈடுபட்ட மின்வாரிய ஒப்பந்த தொழிலாளர்கள் 380 பேர் கைது


ஈரோட்டில், சாலை மறியலில் ஈடுபட்ட மின்வாரிய ஒப்பந்த தொழிலாளர்கள் 380 பேர் கைது
x
தினத்தந்தி 10 Oct 2019 11:00 PM GMT (Updated: 10 Oct 2019 9:21 PM GMT)

ஈரோட்டில் சாலை மறியலில் ஈடுபட்ட மின்வாரிய ஒப்பந்த தொழிலாளர்கள் 380 பேரை போலீசார் கைது செய்தனர்.

ஈரோடு,

மின்வாரியத்தில் பணிபுரியும் ஒப்பந்த தொழிலாளர்களை பணி நிரந்தரம் செய்யக்கோரி, தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பு (சி.ஐ.டி.யு.) சார்பில், ஈரோட்டில் சாலை மறியல் போராட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டு இருந்தது.

இந்த போராட்டத்தில் கலந்து கொள்வதற்காக ஈரோடு, சேலம், மேட்டூர், நாமக்கல், கோபி ஆகிய பகுதிகளில் பணியாற்றும் மின்வாரிய ஒப்பந்த தொழிலாளர்கள், ஈரோடு ஈ.வி.என். ரோட்டில் உள்ள மண்டல தலைமை செயற்பொறியாளர் அலுவலகம் முன்பு நேற்று காலை ஒன்று திரண்டனர்.

கோஷம்

இந்த போராட்டத்துக்கு, தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பின் மாநில துணை பொதுச்செயலாளர் வி.இளங்கோ தலைமை தாங்கினார். ஈரோடு மண்டல செயலாளர் ஜோதிமணி, மாநில துணைத்தலைவர் சிவக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தார்கள்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட செயலாளர் ரகுராமன், கோரிக்கையை வலியுறுத்தி பேசினார். ேமலும் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தங்களை பணிநிரந்தம் செய்யக்கோரி கோஷங்களும் எழுப்பினார்கள்.

380 பேர் கைது

அதைத்தொடர்ந்து மின்வாரிய ஒப்பந்த தொழிலாளர்கள், ஈரோடு -ஈ.வி.என். ரோட்டில் அமர்ந்து, சாலை மறியலில் ஈடுபட்டனர். அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் பன்னீர்செல்வம் தலைமையிலான போலீசார் அவர்களை கைது செய்தனர்.

14 பெண்கள் உள்பட மொத்தம் 380 பேர் கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்டவர்கள் போலீஸ் வேனில் ஏற்றப்பட்டு ஈரோடு பஸ் நிலையம் அருகில் உள்ள தமயந்தி பாபு சேட் திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டனர். இதைத்தொடர்ந்து மாலையில் அனைவரும் விடுதலை செய்யப்பட்டனர். இந்த போராட்டத்தால் ஈரோடு ஈ.வி.என்.ரோட்டில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Next Story