கோவில் உண்டியலை உடைத்து பணம் திருட்டு மர்ம நபர்கள் கைவரிசை


கோவில் உண்டியலை உடைத்து பணம் திருட்டு மர்ம நபர்கள் கைவரிசை
x
தினத்தந்தி 10 Oct 2019 10:45 PM GMT (Updated: 10 Oct 2019 9:24 PM GMT)

கோபி அருகே கோவில் உண்டியலை உடைத்து பணத்தை மர்ம நபர்கள் திருடி சென்று உள்ளனர்.

கடத்தூர்,

கோபியை அடுத்த சிங்கிரிபாளையம் தடப்பள்ளி வாய்க்கால் அருகே கரியகாளியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலின் பூசாரியாக அந்த பகுதியை சேர்ந்த வெள்ளியங்கிரி உள்ளார்.

இவர் கடந்த 8-ந் தேதி காலை கோவிலுக்கு வந்து அம்மனுக்கு பூஜை செய்து விட்டு மதியம் வீட்டுக்கு சென்றுவிட்டார்.

பின்னர் நேற்று முன்தினம் காலை பூஜை செய்வதற்காக கோவிலுக்கு அவர் வந்து உள்ளார். அப்போது கோவிலின் இரும்பு கிரில் கதவில் இருந்த பூட்டு உடைக்கப்பட்டு கிடந்தது கண்டு அதிர்ச்சி அடைந்தார். உடனே அவர் உள்ளே சென்று பார்த்தார். அப்போது அங்கு மாரியம்மன் கோவில் சன்னதியின் முன்பு இருந்த உண்டியல் உடைக்கப்பட்டு கிடந்ததுடன் அதில் காணிக்கை பணம் இல்லாததையும் கண்டார். மேலும் கரியகாளியம்மன் சன்னதி முன்பு இருந்த உண்டியல் உடைக்க முயற்சி நடைபெற்று உள்ளது. ஆனால் அதை உடைக்க முடியவில்லை. அதுமட்டுமின்றி ேகாவிலில் ஒரு அறையில் வைக்கப்பட்டிருந்த கியாஸ் ஸ்டவ் மற்றும் கியாஸ் சிலிண்டரையும் காணவில்லை.

வலைவீச்சு

எனவே சம்பவத்தன்று கோவிலுக்கு வந்த மர்ம நபர்கள் கிரில் கதவின் பூட்டை உடைத்து உள்ளே சென்று உண்டியலை உடைத்து காணிக்கை மற்றும் கியாஸ் அடுப்பு மற்றும் சிலிண்டரை திருடி சென்றது தெரியவந்தது. திருடப்பட்ட உண்டியலில் ரூ.5 ஆயிரத்துக்கும் மேலாக காணிக்கை இருந்திருக்காலம் என கூறப்படுகிறது.

இதுகுறித்த புகாரின் பேரில் கடத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து உண்டியலை உடைத்து பணத்தை திருடி சென்ற மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகிறார்கள்.

Next Story