பட்டாசு கடைகள் வைப்பவர்கள் அரசு பள்ளியில் மரக்கன்றுகளை நட வேண்டும் - காரைக்கால் கலெக்டர் விக்ராந்த் ராஜா வேண்டுகோள்


பட்டாசு கடைகள் வைப்பவர்கள் அரசு பள்ளியில் மரக்கன்றுகளை நட வேண்டும் - காரைக்கால் கலெக்டர் விக்ராந்த் ராஜா வேண்டுகோள்
x
தினத்தந்தி 10 Oct 2019 11:48 PM GMT (Updated: 10 Oct 2019 11:48 PM GMT)

தீபாவளி பண்டிகைக்காக பட்டாசு கடைகள் வைப்பவர்கள் அரசு பள்ளிகளில் குறைந்தபட்சம் 10 மரக்கன்றுகளை நட வேண்டும் என்று மாவட்ட கலெக்டர் விக்ராந்த் ராஜா வேண்டுகோள் விடுத்துள்ளார்.

காரைக்கால்,

தீபாவளி பண்டிகையையொட்டி பட்டாசு கடை நடத்துவோர், மாவட்ட வருவாய்த் துறையிடம் விண்ணப்பித்து, அனுமதி பெறுவது கட்டாயமாகும். இதற்காக காரைக்கால் மாவட்டத்தில் தற்காலிகமாக பட்டாசு கடைகளை அமைக்க உரிமம் கோரி இதுவரை 50-க்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்துள்ளனர். 25-க்கும் மேற்பட்டோர் உரிமங்களைப் புதுப்பிக்க விண்ணப்பித்துள்ளனர்.

தற்காலிக பட்டாசு கடைகளுக்கு வருவாய்த்துறை உரிமம் வழங்குகிறது. விண்ணப்பங்கள் வருவாய்த்துறையிடம் வழங்கப்பட்டு வருகின்றன. இந்த விண்ணப்பங்களை மாவட்ட வருவாய்த்துறை அதிகாரிகள் ஆய்வு செய்து குறித்த நேரத்தில் உரிமத்தை வழங்குவர்.

இதுகுறித்து மாவட்ட கலெக்டர் விக்ராந்த் ராஜா வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:-

காரைக்கால் மாவட்டத்தில் தீபாவளி பண்டிகைக்காக பட்டாசு கடைகள் வைப்பதற்கு விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருகின்றன. விண்ணப்பதாரர்கள் ஒவ்வொருவரும் குறைந்த பட்சம் 10 மரக்கன்றுகள் காரைக்கால் மாவட்டத்தில் உள்ள ஏதாவது ஓர் அரசு பள்ளியில் நட வேண்டும். இதற்கு அப்பள்ளி தலைமை ஆசிரியரிடம் ஒப்புதல் பெற்று வருமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கஜா புயலால் காரைக்கால் மாவட்டத்தில் ஆயிரக் கணக்கான மரங்கள் சாய்ந்து விட்டன. இதைக்கருத்தில் கொண்டு மாவட்ட நிர்வாகம் மரக்கன்றுகளை நட பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன்படி தீபாவளி பண்டிகையையொட்டி பட்டாசு கடைகள் வைப்பதற்காக விண்ணப்பிக்க உள்ள நபர்களுக்கு மாவட்ட நிர்வாகம் சார்பில் இந்த கோரிக்கையை வைத்துள்ளது.

இதன் மூலம் மாவட்டத்தில் 100 கடைகளுக்கு அனுமதி வழங்கப்படும் பட்சத்தில், ஆயிரம் மரக்கன்றுகள் பள்ளி வளாகங்களில் வளர வாய்ப்பு உருவாகும். மாவட்ட நிர்வாகத்தின் இந்த முயற்சிக்கு அனைவரும் ஒத்துழைப்புதர வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story