தொழிலாளி மீது கொலை வெறி தாக்குதல்: கைதான 5 பேர் சிறையில் அடைப்பு


தொழிலாளி மீது கொலை வெறி தாக்குதல்: கைதான 5 பேர் சிறையில் அடைப்பு
x
தினத்தந்தி 10 Oct 2019 11:55 PM GMT (Updated: 10 Oct 2019 11:55 PM GMT)

தொழிலாளி மீது கொலை வெறி தாக்குதல் நடத்திய வழக்கில் கைதான 5 பேர் சிறையில் அடைக்கப்பட்டனர். அவர்களிடம் இருந்து மோட்டார் சைக்கிள்கள், செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

புதுச்சேரி,

புதுச்சேரி திலாஸ்பேட்டை மாந்தோப்பு வீதியை சேர்ந்தவர் ஆறுமுகம் (வயது 29), தொழிலாளி. கடந்த 8-ந் தேதி கோரிமேடு போலீஸ் நிலையம் அருகே சென்று கொண்டிருந்த போது 2 மோட்டார் சைக்கிள்களில் வந்த 6 பேர் அரிவாளுடன் சுற்றி வளைத்து ஆறுமுகம் மீது கொலை வெறி தாக்குதல் நடத்தினார்கள். இதில் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் ஆறுமுகம் சரிந்து விழுந்தார். பின்னர் அந்த கும்பல் அங்கிருந்து தப்பிச்சென்றது. கோரிமேடு போலீசார் அவரை மீட்டு சிகிச்சைக்காக ஜிப்மர் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து கலைவாணர் நகர் மணிரத்னம் (24), ஜீவானந்தபுரம் பிரேம்குமார் (21), தட்டாஞ்சாவடி வெற்றிசெல்வம் (24), லாஸ்பேட்டை சாலமன் (19), நாவற்குளம் வெற்றிவேல் (19) ஆகிய 5 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்களுடன் ஒரு சிறுவனும் சிக்கினான். இவர்களிடம் இருந்து 2 மோட்டார் சைக்கிள்கள், 5 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

கைதான மணிரத்னம் உள்பட அனைவரையும் புதுச்சேரி நீதிமன்றத்தில் போலீசார் ஆஜர்படுத்தினர். இதில் சிறுவன் தவிர மற்றவர்கள் காலாப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். சிறுவன் மட்டும் அரியாங்குப்பம் சிறுவர் சீர்திருத்தப்பள்ளியில் அடைக்கப்பட்டான்.

Next Story