காமராஜ் நகர் தொகுதி இடைத்தேர்தல்: துணை ராணுவ வீரர்கள் புதுவை வருகை


காமராஜ் நகர் தொகுதி இடைத்தேர்தல்: துணை ராணுவ வீரர்கள் புதுவை வருகை
x
தினத்தந்தி 10 Oct 2019 11:58 PM GMT (Updated: 10 Oct 2019 11:58 PM GMT)

காமராஜ் நகர் தொகுதி இடைத்தேர்தலை முன்னிட்டு துணை ராணுவ வீரர்கள் புதுவை வந்துள்ளனர்.

புதுச்சேரி,

புதுவை காமராஜ் நகர் தொகுதி இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு வருகிற 21-ந் தேதி நடைபெற உள்ளது. இந்த தேர்தலை நேர்மையாகவும், அமைதியாகவும் நடத்த தேர்தல் துறையும், காவல்துறையும் இணைந்து பல்வேறு பாதுகாப்பு பணிகளை மேற்கொண்டு வருகிறார்கள்.

தொகுதியில் மொத்தமுள்ள 32 வாக்குச்சாவடிகளில் 9 வாக்குச்சாவடிகள் பதற்றமானவையாக கண்டறியப்பட்டு உள்ளது. அங்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட உள்ளது. அவ்வப்போது போலீசார் கொடி அணிவகுப்பு நடத்தி மக்களிடம் பதற்றத்தை தணித்து வருகின்றனர். மேலும் வாக்காளர்களுக்கு பணம், பரிசு பொருட்கள், மதுபானங்கள் வழங்குவதை தடுக்க ஆங்காங்கே தீவிர வாகன சோதனையும் நடத்தி வருகின்றனர். பொது அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் வகையில் செயல்படும் ரவுடிகள் ஊருக்குள் நுழைய தடை விதிக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் கூடுதல் பாதுகாப்புக்காக துணை ராணுவம் வரவழைக்கப்படும் என்று மாவட்ட கலெக்டரும், தேர்தல் அதிகாரியுமான அருண் தெரிவித்து இருந்தார். அதன்படி நெய்வேலி என்.எல்.சி. நிறுவனத்தில் இருந்து துணை ராணுவத்தினர் (சி.ஐ.எஸ்.எப்.) 90 பேர் உதவி கமாண்டன்ட் பிரசாத் தலைமையில் நேற்று புதுவை வந்தனர். அவர்கள் கோரிமேடு காவலர் பயிற்சி பள்ளியில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர்.

துணை ராணுவ வீரர்கள், உள்ளூர் போலீசாருடன் இணைந்து இன்று (வெள்ளிக்கிழமை) முதல் சுழற்சி முறையில் காமராஜ் நகர் தொகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். பதற்றமான வாக்குச்சாவடிகளில் துணை ராணுவத்தினர் கூடுதலாக ஈடுபடுத்தப்பட இருக்கின்றனர்.

Next Story