மாவட்டத்தில் டெங்கு இல்லாத நிலையை உருவாக்க வேண்டும் ஆலோசனை கூட்டத்தில் கலெக்டர் ‌ஷில்பா வலியுறுத்தல்


மாவட்டத்தில்  டெங்கு இல்லாத நிலையை உருவாக்க வேண்டும் ஆலோசனை கூட்டத்தில் கலெக்டர் ‌ஷில்பா வலியுறுத்தல்
x
தினத்தந்தி 11 Oct 2019 11:00 PM GMT (Updated: 11 Oct 2019 5:26 PM GMT)

நெல்லை மாவட்டத்தில் டெங்கு காய்ச்சல் இல்லாத நிலையை உருவாக்க வேண்டும் என்று கலெக்டர் ‌ஷில்பா கூறினார்.

நெல்லை,

நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் நேற்று மாவட்ட அளவிலான டெங்கு தடுப்பு ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கலெக்டர் ‌ஷில்பா தலைமை தாங்கி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

நெல்லை மாவட்டத்தில் கடந்த காலங்களை விட டெங்கு பாதிப்பு மிக குறைவாக உள்ளது. மேலும் ஒருங்கிணைந்து செயல்பட்டு மாவட்டத்தில் டெங்கு பாதிப்பு இல்லாத நிலையை உருவாக்க வேண்டும். அரசு ஆஸ்பத்திரிகளில் டெங்கு காய்ச்சலுடன் வரும் அனைத்து நோயாளிகளுக்கும் ரத்த மாதிரிகள் எடுத்து டெங்கு, சிக்குன் குனியா, மலேரியா, எலி காய்ச்சல் உள்ளதா? என்று ஆய்வு செய்து உறுதி படுத்தி உரிய சிகிச்சை அளிக்க வேண்டும்.

அரசு ஆஸ்பத்திரிகளில் டெங்கு காய்ச்சலுக்கான மருந்துகள் இருப்பதை உறுதி செய்ய வேண்டும். அரசு ஆஸ்பத்திரி வளாகத்தில் கொசு புழுக்கள் உற்பத்தி இல்லாதவாறு சுகாதார நடவடிக்கை எடுக்க வேண்டும். அரசு ஆஸ்பத்திரிகளில் குறைந்தபட்சம் 10 படுக்கைகள் கொசு வலையுடன் கூடிய காய்ச்சல் பிரிவை ஏற்படுத்தி, 24 மணி நேரமும் சிறப்பு டாக்டர், செவிலியர் பணியில் இருக்க வேண்டும்.

டெங்கு காய்ச்சலை தடுப்பதில் முக்கிய பங்கு வகிக்கும் நிலவேம்பு கசாயம் தயாரிக்க தேவையான நிலவேம்பு பொடி போதுமான அளவில் இருப்பில் உள்ளதா? என்று சித்த மருத்துவ அலுவலர்களை ஒருங்கிணைத்து அவ்வப்போது கண்காணிக்க வேண்டும்.

நோய் கண்காணிப்பு பணிகள் மற்றும் தடுப்பு நடவடிக்கைகளை அனைத்து கிராமங்களிலும் தீவிரமாக நடைமுறைப்படுத்த வேண்டும்.

காய்ச்சல் சிகிச்சைக்கான மருந்துகள் அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் இருப்பதை உறுதிபடுத்த வேண்டும். கொசுப்புகை மருந்து அடிக்க தேவையான மூலப்பொருட்களை ஏற்பாடு செய்ய வேண்டும். குடிநீரில் குளோரின் அளவு சரியாக இருக்க வேண்டும்.

குடிநீர் குழாய் உடைப்பு, சாக்கடை நீர் கலப்பது போன்றவற்றை கண்காணித்து சரிசெய்ய வேண்டும். பள்ளிகள், கல்லூரிகளில் மாணவர்களை தூய்மை தூதுவராக நியமித்து பொதுமக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். விடுதி மாணவர் களுக்கு காய்ச்சல் இருந்தால் சுகாதார துறைக்கு உடனடியாக தகவல் தெரிவித்து சிகிச்சைக்கு ஏற்பாடு செய்ய வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

கூட்டத்தில் நெல்லை மாநகராட்சி ஆணையாளர் விஜயலட்சுமி, அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரி டீன் கண்ணன், ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் மந்திராசலம், முதன்மை கல்வி அலுவலர் பூபதி, சுகாதாரத்துறை துணை இயக்குனர்கள் செந்தில்குமார் (நெல்லை), நளினி (சங்கரன்கோவில்) உள்பட பல்வேறு துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Next Story