தாலுகா அலுவலகங்களில் விவசாய தொழிலாளர்கள் கோரிக்கை மனு கொடுக்கும் போராட்டம்


தாலுகா அலுவலகங்களில் விவசாய தொழிலாளர்கள் கோரிக்கை மனு கொடுக்கும் போராட்டம்
x
தினத்தந்தி 11 Oct 2019 10:00 PM GMT (Updated: 11 Oct 2019 7:11 PM GMT)

தூத்துக்குடி மாவட்டத்தில் தாலுகா அலுவலகங்களில் விவசாய தொழிலாளர்கள் கோரிக்கை மனு கொடுக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

எட்டயபுரம்,

தகுதி உள்ள அனைவருக்கும் இலவச வீட்டுமனை பட்டா, முதியோர் உதவித்தொகை, விதவை உதவித்தொகை வழங்க வேண்டும். மத்திய அரசின் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு உறுதி திட்டத்தை நகர பஞ்சாயத்து பகுதிகளுக்கும் விரிவுபடுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, இந்திய விவசாய தொழிலாளர் சங்கத்தினர் நேற்று எட்டயபுரம் தாலுகா அலுவலகத்தில் மனு கொடுக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சங்க மாவட்ட தலைவர் ரவீந்திரன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு தாலுகா குழு உறுப்பினர்கள் ராஜப்பா, ராமர், முருகேசன், விவசாயிகள் சங்க மாவட்ட குழு உறுப்பினர் நடராஜன், கட்டுமான தொழிலாளர் சங்க மாவட்ட இணை செயலாளர் செல்வகுமார் உள்பட பலர் கலந்து கொண்டனர். பின்னர் அவர்கள், தாசில்தார் அழகரிடம் கோரிக்கை மனுக்களை வழங்கி விட்டு, கலைந்து சென்றனர்.

இதேபோன்று விளாத்திகுளம் தாலுகா அலுவலகத்தில் விவசாய தொழிலாளர் சங்கத்தினர் நேற்று கோரிக்கை மனு கொடுக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர். சங்க தாலுகா பொறுப்பாளர் மலைக்கனி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு தாலுகா செயலாளர் புவிராஜ், சி.ஐ.டி.யு. ஒருங்கிணைப்பாளர் ஜோதி உள்பட பலர் கலந்து கொண்டனர். பின்னர் அவர்கள், தாசில்தார் ராஜ்குமாரிடம் கோரிக்கை மனுக்களை வழங்கி விட்டு, கலைந்து சென்றனர்.

இதேபோன்று சாத்தான்குளம் தாலுகா அலுவலகத்தில் விவசாய தொழிலாளர் சங்கத்தினர் கோரிக்கை மனு கொடுக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர். சங்க வட்ட குழு தலைவர் முருகேசன், துணை தலைவர் பாக்கியலட்சுமி, செயலாளர் ஜெயபால், பொருளாளர் பாலசுந்தர கணபதி, மாவட்ட இணை செயலாளர் பாலகிரு‌‌ஷ்ணன் உள்பட பலர் கலந்து கொண்டனர். பின்னர் அவர்கள், தாசில்தார் ராஜலட்சுமியிடம் கோரிக்கை மனுக்களை வழங்கி விட்டு, கலைந்து சென்றனர்.

இதேபோன்று திருச்செந்தூர் தாலுகா அலுவலகத்தில் விவசாய தொழிலாளர் சங்கத்தினர் கோரிக்கை மனு கொடுக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர். சங்க ஒன்றிய தலைவர் துரைராஜ், மாவட்ட துணை தலைவர் பன்னீர்செல்வம், மாவட்ட துணை செயலாளர் கந்தசாமி, மாவட்ட குழு உறுப்பினர் தேவாரம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு ஒன்றிய செயலாளர்கள் முத்துகுமார், ஆறுமுகம் உள்பட பலர் கலந்து கொண்டனர். பின்னர் அவர்கள், மண்டல துணை தாசில்தார் கோபாலிடம் கோரிக்கை மனுக்களை வழங்கி விட்டு, கலைந்து சென்றனர்.

ஓட்டப்பிடாரம் தாலுகா அலுவலகத்தில் நேற்று அகில இந்திய விவசாய தொழிலாளர்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட செயலாளர் சண்முகராஜ் தலைமை தாங்கினார். தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் ஆறுமுகம் ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்து கோரிக்கை குறித்து பேசினார். ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள், ஓட்டப்பிடாரத்தில் வீடு இல்லாதவர்களுக்கு அரசு சார்பில் இலவச வீடு, இலவச வீட்டு மனை பட்டா வழங்க வேண்டும். உழவர் பாதுகாப்பு திட்டத்தின் படி 60 வயதை கடந்த அனைத்து முதியோருக்கும் ரூ.3 ஆயிரம் பென்சன் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் குறித்து கோ‌‌ஷங்கள் எழுப்பினார்கள். பின்னர் கோரிக்கை அடங்கிய மனுவை ஓட்டப்பிடாரம் தாசில்தார் ரகுவிடம் வழங்கினார்கள். அப்போது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி ஒன்றிய குழு உறுப்பினர்கள் கணேசன், மாரியப்பன், மாதர் சங்க ஒன்றிய செயலாளர் கலைச்செல்வி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Next Story