கூடலூர் அருகே ஊருக்குள் புகுந்த காட்டுயானை வீட்டை சேதப்படுத்தியது


கூடலூர் அருகே ஊருக்குள் புகுந்த காட்டுயானை வீட்டை சேதப்படுத்தியது
x
தினத்தந்தி 11 Oct 2019 10:45 PM GMT (Updated: 11 Oct 2019 7:24 PM GMT)

கூடலூர் அருகே ஊருக்குள் புகுந்த காட்டு யானை வீட்டை சேதப்படுத்தியது.

கூடலூர்,

கூடலூர் அருகே உள்ள கீழ்நாடுகாணி தமிழக- கேரள எல்லையில் அமைந்துள்ளது. இதன் அருகே அடர்ந்த வனப்பகுதி மற்றும் தாவரவியல் பூங்கா உள்ளன. காட்டு யானைகள் உள்ளிட்ட வனவிலங்குகள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதியாக விளங்குகிறது. இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு காட்டு யானை ஒன்று கீழ்நாடுகாணி பகுதிக்குள் புகுந்தது. பின்னர் அந்தப்பகுதியில் காட்டு யானை பிளிறியபடி உலா வந்தது.

யானையின் சத்தம் கேட்டதால் பொதுமக்கள் வெளியே வராமல் வீட்டுக்குள்ளே முடங்கினார்கள். இந்தநிலையில் அந்த யானை, அதே பகுதியை சேர்ந்த கூலித் தொழிலாளியான கணேசமூர்த்தி என்பவரின் வீட்டை சுற்றி வந்தது. திடீரென அந்த யானை, கணேசமூர்த்தியின் வீட்டின் சுவரை முட்டித்தள்ளியதால் சுவர் இடிந்து விழுந்தது.

அப்போது அந்த வீட்டில் இருந்து கணேசமூர்த்தி மற்றும் அவரின் குடும்பத்தினர் அங்கிருந்து ஓட்டம்பிடித்து, பாதுகாப்பான இடங்களுக்கு சென்றனர். நேற்று அதிகாலை வரை அந்த காட்டு யானை அந்தப்பகுதியிலேயே சுற்றித்திரிந்தது. பின்னர் அங்குள்ள தோட்டங்களில் புகுந்து வாழைகளை தின்றும், காலால் மிதித்தும் நாசம் செய்தது. இதுகுறித்து பொதுமக்கள் வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். ஆனால் வனத்துறையினர் யாரும் அங்கு வரவில்லை.

இதனால் பொதுமக்களே அந்த காட்டு யானையை வனப்பகுதிக்குள் விரட்டும் முயற்சியில் ஈடுபட்டனர். ஆனால் அந்த காட்டு யானை வனப்பகுதிக்குள் போகாமல் அந்தப்பகுதியிலேயே சுற்றித்திரிந்தது. இதைத்தொடர்ந்து காலை 7 மணி அளவில் அந்த காட்டு யானை தானாகவே வனப்பகுதிக்குள் சென்று விட்டது.

இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், காட்டு யானைகள் அடிக்கடி ஊருக்குள் வருவதால் பாதுகாப்பு இல்லாத சூழலில் வாழ்ந்து வருகிறோம். அதனால் யானைகள் ஊருக்குள் புகாதவகையில் அகழி அமைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தோம். அதன்படி அகழி அமைக்கும் பணி நடந்தது. ஆனால் அந்தப்பணியும் முழுமையாக முடியாமல் பாதியில் விடப்பட்டு உள்ளது. இதனால் தான் யானைகள் அடிக்கடி கிராமப்பகுதிக்குள் புகுந்துவிடுகின்றன.

எனவே அகழி அமைக்கும் பணியை மீண்டும் தொடங்கி, யானைகள் ஊருக்குள் புகுந்துவிடாத வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

Next Story