கடலூர், சிதம்பரம், குறிஞ்சிப்பாடியில் விவசாய தொழிலாளர்கள் மனு கொடுக்கும் போராட்டம்


கடலூர், சிதம்பரம், குறிஞ்சிப்பாடியில் விவசாய தொழிலாளர்கள் மனு கொடுக்கும் போராட்டம்
x
தினத்தந்தி 11 Oct 2019 10:45 PM GMT (Updated: 11 Oct 2019 7:31 PM GMT)

கடலூர், சிதம்பரம், குறிஞ்சிப்பாடியில் விவசாய தொழிலாளர்கள் மனு கொடுக்கும் போராட்டம் நடத்தினர்.

கடலூர்,

அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கம் கடலூர் ஒன்றியம் சார்பில் கடலூர் தாலுகா அலுவலகத்தில் மனு கொடுக்கும் போராட்டம் நடைபெற்றது. இதற்கு ஒன்றிய செயலாளர் கிருஷ்ணமூர்த்தி தலைமை தாங்கினார். நிர்வாகிகள் பாவாடைசாமி, சங்கர், பக்கிரி, வளர்மதி, ஜோதி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

போராட்டத்தில் கலந்துகொண்ட விவசாய தொழிலாளர்கள் கோரிக்கை மனுவுடன் கடலூர் தாலுகா அலுவலகம் எதிரே சாமியானா பந்தல் அமைத்து அங்கு அமர்ந்திருந்தனர். பின்னர் பாதிரிக்குப்பம் ஊராட்சி நத்தவெளி சாலையோரத்தில் 25 ஆண்டுகளாக வசித்து வந்த 74 குடும்பத்தினருக்கு உடனடியாக வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும், நில ஆர்ஜிதம்செய்யப்பட்டு 27 ஆண்டுகளாகியும் மனைப்பட்டா வழங்காத கீழ்அழிஞ்சிப்பட்டு ஊராட்சி செங்காட்டுகாலனி மக்களுக்கு மனைப்பட்டா வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடைபெற்றது. இதைத்தொடர்ந்து கடலூர் தாசில்தார் செல்வகுமாரிடம் விவசாய தொழிலாளர்கள் மனு கொடுத்தனர். இந்த போராட்டத்தில் அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கத்தின் தலைவர் திருநாவுக்கரசு, ஒன்றிய தலைவர் வைத்திலிங்கம், துணை தலைவர்கள் கோதண்டபாணி, கோவிந்தம்மாள், செந்தாமரைக்கண்ணன், பொருளாளர் தமிழரசன் மற்றும் நிர்வாகிகள், விவசாய தொழிலாளர்கள் கலந்துகொண்டனர்.

இதேபோல் வீடு இல்லாத அனைவருக்கும் வீடு மற்றும் வீட்டு மனைப் பட்டா வழங்க வேண்டும், தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தின்படி தொழிலாளர்களுக்கு 200 நாட்கள் வேலை மற்றும் ரூ.400 ஊதியம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அகில இந்திய விவசாய தொழிலாளர்கள் சங்கம் சார்பில் சிதம்பரம் சப்-கலெக்டர் அலுவலகம் முன்பு மனு கொடுக்கும் போராட்டம் நடைபெற்றது.

இதற்கு மாவட்ட பொருளாளர் செல்லையா தலைமை தாங்கினார். தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாநில செயலாளர் வாஞ்சிநாதன் முன்னிலை வகித்தார். நிர்வாகிகள் அரசன், ராஜா, அசோகன், மணி, முருகன் கலந்து கொண்டனர்.

இதையடுத்து அவர்கள் சப்-கலெக்டரிடம் மனு கொடுக்க சென்றனர். ஆனால் அங்கு அவர் இல்லாததால், சப்-கலெக்டரின் நேர்முக உதவியாளர் ராமதாசிடம் மனு கொடுத்தனர். மனுவை பெற்றுக்கொண்ட அவர் இது குறித்து நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார். இதையேற்று அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

குறிஞ்சிப்பாடி தாலுகா அலுவலகம் முன்பு நடைபெற்ற மனு கொடுக்கும் போராட்டத்துக்கு அகில இந்திய விவசாய தொழிலாளர்கள் சங்க மாவட்டக்குழு உறுப்பினர் அஞ்சலை தலைமை தாங்கினார். ஒன்றிய பொருளாளர் செல்வராஜ், ஒன்றிய துணைத்தலைவர் சேகர், மாதர்சங்கம் சகுந்தலா ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் மாவட்ட தலைவர் ஏழுமலை, முன்னாள் மாவட்ட செயலாளர் தண்டபாணி, மாவட்ட துணை செயலாளர் வாசு, ஒன்றிய தலைவர் ஜெயராமன், மாதர்சங்க மாவட்ட துணைத்தலைவர் சிவகாமி, சுரேஷ் உள்பட பலர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனர். இதையடுத்து அவர்கள் தங்கள் கோரிக்கை மனுவை குறிஞ்சிப்பாடி தாசில்தார் கீதாவிடம் கொடுத்தனர்.

காட்டுமன்னார்கோவில் தாலுகா அலுவலகம் முன்பு அகில இந்திய விவசாய தொழிலாளர்கள் சங்கத்தினர் மனு கொடுக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர். வீட்டுமனைபட்டா, முதியோர் உதவித்தொகை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நடந்த போராட்டத்திற்கு மாவட்ட துணை செயலாளர் ஜெயக்குமார் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் பிரகாஷ், குமராட்சி ஒன்றிய தலைவர் செல்வகாந்தன், காட்டுமன்னார்கோவில் ஒன்றிய செயலாளர் வெற்றிவீரன், ஒன்றிய துணை செயலாளர் சக்கரவர்த்தி, துணைத்தலைவர் சிங்காரவேலு, துணை செயலாளர் அப்துல் அஜிஸ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story