மருங்கூரில் ஆபத்தான மின்கம்பம் அகற்றப்படுமா? பொதுமக்கள் எதிர்பார்ப்பு


மருங்கூரில் ஆபத்தான மின்கம்பம் அகற்றப்படுமா? பொதுமக்கள் எதிர்பார்ப்பு
x
தினத்தந்தி 11 Oct 2019 10:30 PM GMT (Updated: 11 Oct 2019 8:17 PM GMT)

திருமருகல் அருகே மருங்கூரில் ஆபத்தான நிலையில் உள்ள மின்கம்பம் அகற்றப்படுமா? என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.

திருமருகல்,

நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் மருங்கூர் காராமணி தெருவில் 50-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த தெருவில் மின்கம்பம் ஒன்று உள்ளது. தற்போது இந்த மின்கம்பம் சேதமடைந்து சிமெண்டு காரைகள் பெயர்ந்து இரும்புகம்பிகள் வெளியே தெரியும் நிலையில் காட்சியளிக்கிறது.

இது எந்த நேரத்திலும் முறிந்து விழும் ஆபத்தான நிலையில் உள்ளது. இதனால் அப்பகுதி வீடுகளில் உள்ள பொதுமக்கள் மற்றும் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் அந்த வழியாக செல்ல அச்சப்படுகின்றனர்.

இந்த ஆபத்தான மின்கம்பத்தை அகற்றிவிட்டு, புதிய மின்கம்பம் அமைத்து தர வேண்டும் எனவும், இப்பகுதியில் பல இடங்களில் தாழ்வாக செல்லும் மின்கம்பிகளை சீரமைத்து தர வேண்டும் எனவும் மின்வாரிய துறையினருக்கு பலமுறை மனுக்கள் கொடுத்தும், இதுவரை செய்து தரவில்லை என பொதுமக்கள் வேதனையுடன் தெரிவிக்கின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உயிர் சேதம் ஏற்படுவதற்கு முன்பு காராமணி தெருவில் ஆபத்தான நிலையில் உள்ள மின்கம்பத்தை அகற்றிவிட்டு, புதிய மின்கம்பம் அமைத்தும், தாழ்வாக செல்லும் மின் கம்பிகளை சீரமைத்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் எதிர்பார்த்துள்ளனர்.

Next Story