திருச்சி விமான நிலையத்தில் ஒரே நாளில் 6 பயணிகள் கடத்தி வந்த 2 கிலோ தங்கம் பறிமுதல்


திருச்சி விமான நிலையத்தில் ஒரே நாளில் 6 பயணிகள் கடத்தி வந்த 2 கிலோ தங்கம் பறிமுதல்
x
தினத்தந்தி 11 Oct 2019 11:00 PM GMT (Updated: 11 Oct 2019 8:18 PM GMT)

திருச்சி விமான நிலையத்தில் ஒரே நாளில் 6 பயணிகள் கடத்தி வந்த 2 கிலோ தங்கத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

செம்பட்டு, 

திருச்சிக்கு நேற்று முன்தினம் இரவு விமானங்களில் வந்த பயணிகள் மற்றும் அவர்களுடைய உடைமைகளை மத்திய வான் நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது உடைமைகள் மற்றும் உடலில் மறைத்து 6 பயணிகள் தங்க கட்டிகள், சங்கிலிகள் போன்றவற்றை கடத்தி வந்தது தெரியவந்தது.

இதில் சிங்கப்பூரில் இருந்து வந்த சென்னையை சேர்ந்த அசாருதீன்(வயது 35) என்பவரிடம் இருந்து 188 கிராம் தங்கத்தையும், அப்துல் ஹமீது(37) என்பவரிடம் இருந்து 189.5 கிராம் தங்கத்தையும், சிவகங்கை மாவட்டம் தேவகோட்டையை சேர்ந்த செல்லம்(42) என்ற பயணியிடம் இருந்து 159.7 கிராம் தங்கத்தையும் அதிகாரிகள் கைப்பற்றி, பறிமுதல் செய்தனர்.

இதேபோல் மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இருந்து திருச்சிக்கு விமானத்தில் வந்த ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையை சேர்ந்த முகம்மது ஆசிக்(39) என்ற பயணியிடம் இருந்து 327 கிராம் தங்கத்தை பறிமுதல் செய்தனர்.

துபாயில் இருந்து திருச்சிக்கு ஏர் இந்தியா விமானத்தில் வந்த காஞ்சீபுரத்தை சேர்ந்த ஜாகிர் உசேனிடம் இருந்து 546 கிராம் தங்கத்தையும், ராமநாதபுரம் மாவட்டம் எஸ்.பி. பட்டினத்தைச் சேர்ந்த பாசூல் ஹக் என்பவரிடம் இருந்து 532.5 கிராம் தங்கத்தையும் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இதன்படி ஒரே நாளில் 6 பயணிகளிடம் மொத்தம் 1 கிலோ 942.7 கிராம் தங்கத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது. அவற்றின் மதிப்பு ரூ.74 லட்சத்து 9 ஆயிரத்து 640 என்று சுங்கத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Next Story