முன்விரோத தகராறில் தொழிலாளியை கார் ஏற்றி கொல்ல முயற்சி - 4 பேர் மீது வழக்கு


முன்விரோத தகராறில் தொழிலாளியை கார் ஏற்றி கொல்ல முயற்சி - 4 பேர் மீது வழக்கு
x
தினத்தந்தி 11 Oct 2019 10:15 PM GMT (Updated: 11 Oct 2019 8:18 PM GMT)

கொட்டாரம் அருகே முன்விரோத தகராறில் தொழிலாளியை கார் ஏற்றி கொல்ல முயன்ற 4 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கன்னியாகுமரி,

கொட்டாரம் அருகே பொட்டல்குளம் குமரன்குன்றம் சாலையை சேர்ந்தவர் கண்ணன் (வயது 48). தொழிலாளி. நேற்று முன்தினம் இரவு இவர் மந்தாரம்புதூர் சாலையில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது 4 பேர் கும்பல் வந்த கார், கண்ணன் சென்ற மோட்டார் சைக்கிள் மீது மோதியது.

இதில் மோட்டார் சைக்கிளில் இருந்து கண்ணன் கீழே விழுந்தார். பின்னர் அந்த கும்பலை சேர்ந்தவர்கள் காரில் இருந்து இறங்கி கண்ணனை கம்பு மற்றும் பீர்பாட்டிலால் தாக்கி விட்டு தப்பிச் சென்றனர்.

இதுகுறித்து கன்னியாகுமரி போலீஸ் நிலையத்தில் கண்ணன் புகார் கொடுத்தார். அந்த புகாரின் பேரில் போலீசார் நடத்திய விசாரணையில், மந்தாரம்புதூரை சேர்ந்த பால்சனுக்கும் (48), கண்ணனுக்கும் முன்விரோதம் இருந்து வந்துள்ளது. மேலும் தன்னை எதிர்த்த கண்ணனை, ஏதாவது ஒரு வகையில் பழிவாங்க வேண்டும் என்று பால்சன் நினைத்தார். இந்த நிலையில் பால்சன், பிரபாகரன் (42), குருமூர்த்தி (40), சந்திரகுமார் ஆகியோருடன் சேர்ந்து கண்ணனை காரால் ஏற்றி கொல்ல முயன்றது தெரியவந்தது. இதனையடுத்து 4 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story