ஓட்டு வங்கி அரசியலை விட நாட்டின் பாதுகாப்பு முக்கியம் என்பதை எதிர்க்கட்சிகள் உணரவில்லை அமித்ஷா தாக்கு


ஓட்டு வங்கி அரசியலை விட நாட்டின் பாதுகாப்பு முக்கியம் என்பதை எதிர்க்கட்சிகள் உணரவில்லை அமித்ஷா தாக்கு
x
தினத்தந்தி 11 Oct 2019 10:36 PM GMT (Updated: 11 Oct 2019 10:36 PM GMT)

ஓட்டு வங்கி அரசியலை விட நாட்டின் பாதுகாப்பு முக்கியம் என்பதை எதிர்க்கட்சிகள் உணரவில்லை என மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா கூறினார்.

மும்பை,

மராட்டிய சட்டசபை தேர்தலில் பா.ஜனதா - சிவசேனா கூட்டணியை ஆதரித்து மத்திய உள்துறை மந்திரி அமித் ஷா பிரசாரம் செய்து வருகிறார். நேற்று புல்தானாவில் நடந்த பிரசார பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசினார்.

அப்போது அவர் கூறியதாவது:-

காஷ்மீர் பிரச்சினை குறித்து காங்கிரஸ் கட்சியின் இங்கிலாந்து பிரிவு அந்நாட்டு தொழிலாளர் கட்சி தலைவர் ஜெர்மி கார்பினுடன் விவாதிக்கிறது. இது இந்தியாவின் உள்நாட்டு பிரச்சினைகளின் மூன்றாவது நபரின் தலையீடு கூடாது என்ற நாட்டின் நிலைப்பாட்டுக்கு எதிரானது. எனவே ராகுல்காந்தி மன்னிப்பு கேட்க வேண்டும். இதுபற்றி ராகுல்காந்தி தனது நிலைப்பாட்டை தெளிவுபடுத்த வேண்டும்.

மத்தியில் பா.ஜனதா கூட்டணி இரண்டாவது முறையாக வெற்றி பெற்றதும், ஜம்மு-காஷ்மீரை இந்தியாவுடன் ஒருங்கிணைக்க தடையாக இருந்த 370 மற்றும் 35ஏ சட்டப்பிரிவுகளை நீக்குவது தான் மோடியின் முதல் முடிவாக இருந்தது.

எந்தவொரு பிரதமரும் இந்த பிரச்சினையை தொட துணியவில்லை. ஆனால் மோடி அதை செய்தார். இன்று காஷ்மீர் நாட்டின் ஒருங்கிணைந்த பகுதியாகி இருக்கிறது.

காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்தை நீக்கினால் பள்ளத்தாக்கில் ரத்த ஆறு ஓடும் என்று காங்கிரஸ் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத் கூறினார். நாடாளுமன்றத்தில் இந்த முடிவுக்கு எதிராக வாக்களித்தார். ஆனால் ஒரு துளி ரத்தம் கூட சிந்தவில்லை.

மராட்டிய அரசியலுடன் 370-வது பிரிவுக்கு என்ன தொடர்பு இருக்கிறது என எதிர்க்கட்சிகள் கேட்கின்றன. காஷ்மீர் இந்தியாவின் ஒரு பகுதியாக இருக்க வேண்டும் என ஒட்டு மொத்த நாடும் விரும்பியது. மோடி அந்த விருப்பதை நிறைவேற்றினார்.

மராட்டியத்துக்கு காஷ்மீருடன் தொடர்பு இல்லையா? புல்தானாவை சேர்ந்த வீரர்கள் காஷ்மீரின் பாதுகாப்பிற்காக தங்களது உயிரை தியாகம் செய்தனர்.

வாக்கு வங்கி அரசியலை விட நாட்டின் பாதுகாப்பு முக்கியமானது. தேசிய பிரச்சினைகள் முக்கியம் என்பதை எதிர்க்கட்சிகள் உணரவில்லை.

முன்பு பாகிஸ்தான் பயங்கரவாதிகள் இந்தியாவை தாக்கிய போது எந்த எதிர்வினையும் இல்லை. அப்போதைய பிரதமர் (மன்மோகன் சிங்) அமைதியாக இருந்தார். ஆனால் 2014-ல் பா.ஜனதா மத்தியில் ஆட்சிக்கு வந்த பிறகு இந்த அணுகுமுறை மாறியது.

உரி, புலவாமா தாக்குதல் நடந்த போது துல்லிய தாக்குதல் மற்றும் வான்வழி தாக்குதல்கள் மூலம் மோடி பதிலடி கொடுத்தார். காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கட்சிகளால் நாட்டை பாதுகாப்பாக வைத்திருக்க முடியாது.

2024-ம் ஆண்டுக்குள் தேசிய குடிமக்கள் பதிவேடு அமல்படுத்தப்பட்டு சட்டவிரோதமாக குடியேறியவர்கள் அனைவரும் வெளியேற்றப்படுவார்கள்.

370-வது சட்டப்பிரிவு ரத்து செய்யப்பட்ட பின்னர் நடைபெறும் முதல் தேர்தல் இதுவாகும். நாட்டின் முக்கியமான பிரச்சினைகளில் நாங்கள் அனைவரும் ஒன்று என்பதை காட்டுவதற்கு மக்களுக்கு வாய்ப்பு கிடைத்து உள்ளது.

மராட்டியத்தின் அடுத்த 5 ஆண்டுகளுக்கும் தேவேந்திர பட்னாவிஸ் முதல்-மந்திரியாக இருப்பார். 4-ல் 3 பங்கு இடங்களில் பா.ஜனதா கூட்டணியை வாக்காளர்கள் வெற்றி பெறச் செய்ய வேண்டும். இவ்வாறு அமித்ஷா பேசினார்.

Next Story