கடைகளில் பூட்டை உடைத்து திருடிய சிறுவன் உள்பட 2 பேர் கைது கண்காணிப்பு கேமரா மூலம் சிக்கினர்


கடைகளில் பூட்டை உடைத்து திருடிய சிறுவன் உள்பட 2 பேர் கைது கண்காணிப்பு கேமரா மூலம் சிக்கினர்
x
தினத்தந்தி 12 Oct 2019 10:15 PM GMT (Updated: 12 Oct 2019 4:48 PM GMT)

சென்னை புறநகர் பகுதிகளில் உள்ள கடைகளில் பூட்டை உடைத்து தொடர் திருட்டில் ஈடுபட்டு வந்த சிறுவன் உள்பட 2 பேரை போலீசார் கண்காணிப்பு கேமரா உதவியுடன் பிடித்து கைது செய்தனர்.

திரு.வி.க.நகர்,

சென்னை புறநகர் பகுதிகளான செம்பியம், ராஜமங்களம், கொளத்தூர், வில்லிவாக்கம், திரு.வி.க.நகர் ஆகிய பகுதிகளில் உள்ள கடைகளில் கடந்த சில நாட்களாக பூட்டுகள் உடைக்கப்பட்டு பணம் கொள்ளை போவதாகவும், 10-க்கும் மேற்பட்ட கடைகளில் கொள்ளை முயற்சி நடந்துவந்ததாகவும் அப்பகுதியில் உள்ள போலீஸ் நிலையங்களுக்கு புகார்கள் வந்தன.

அதன் பேரில், போலீஸ் அதிகாரிகள் அங்குள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்து பார்த்தனர். அப்போது அதில், 2 மர்மநபர்கள் கடைகளின் பூட்டை உடைத்து திருடுவது தெரியவந்தது. இதையடுத்து, செம்பியம் உதவி கமிஷனர் சுரேந்திரன் தலைமையில் திரு.வி.க. நகர் இன்ஸ்பெக்டர் சண்முகம் மேற்பார்வையில் தனிப்படை அமைத்து 2 பேரை தேடி வந்தனர்.

இந்நிலையில், நேற்றுமுன்தினம் கொளத்தூர் குமரன் நகரில் 2 பேரும் சுற்றித்திரிவது போலீசாருக்கு தெரியவந்தது. சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற திரு.வி.க. நகர் சப்- இன்ஸ்பெக்டர் சசிகுமார் உள்ளிட்ட போலீசார் இரண்டு பேரையும் மடக்கி பிடித்தனர்.

விசாரணையில், அவர்கள் பெரம்பூர் மங்களபுரம் பகுதியைச் சேர்ந்த சுபாஷ் (வயது 21) மற்றும் 17 வயது சிறுவன் என்பதும் தெரியவந்தது. இதைத்தொடர்ந்து, 2 பேரையும் கைது செய்த போலீசார், அவர்களிடமிருந்து ரூ.1,000, 2 செல்போன்கள் மற்றும் மோட்டார் சைக்கிளையும் பறிமுதல் செய்தனர். அதன் பின்னர், சுபாசை புழல் சிறையில் அடைத்தனர். சிறுவனை சிறுவர் சீர்திருத்தப்பள்ளியில் சேர்த்தனர்.

Next Story