மக்கள் நிம்மதியாக வாழ்வதை உறுதி செய்துள்ளோம் - நாராயணசாமி பெருமிதம்


மக்கள் நிம்மதியாக வாழ்வதை உறுதி செய்துள்ளோம் - நாராயணசாமி பெருமிதம்
x
தினத்தந்தி 12 Oct 2019 11:30 PM GMT (Updated: 12 Oct 2019 5:38 PM GMT)

மக்கள் நிம்மதியாக வாழ்வதை உறுதி செய்துள்ளோம் என்று முதல்-அமைச்சர் நாராயணசாமி கூறினார்.

புதுச்சேரி,

புதுவை காமராஜ் நகர் சட்டமன்ற இடைத்தேர்தலில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் ஜான்குமாரை ஆதரித்து கவிக்குயில் நகரில் முதல்-அமைச்சர் நாராயணசாமி வீடுவீடாக சென்று வாக்குசேகரித்தார். அவருடன் அமைச்சர் கந்தசாமி மற்றும் நிர்வாகிகள் சென்றனர்.

அப்போது முதல்-அமைச்சர் நாராயணசாமி நிருபர்களிடம் கூறியதாவது:-

காமராஜ் நகர் தொகுதி மக்கள் எங்களுக்கு அமோக வரவேற்பு அளிக்கின்றனர். இங்கு ஏற்கனவே எம்.எல்.ஏ.வாக இருந்த வைத்திலிங்கம் கிருஷ்ணாநகர், ரெயின்போ நகர் பகுதிகளில் நிறைய மேம்பாட்டு பணிகளை செய்துள்ளார். அவரது செயல்பாடுகளை இத்தொகுதி மக்கள் அங்கீகரித்து உள்ளனர்.

ஜான்குமார் தேர்ந்தெடுக்கப்பட்டால் இன்னும் நிறைய செய்வார் என்று மக்கள் நம்புகிறார்கள். காங்கிரஸ் ஆட்சியில் மக்கள் நலத்திட்டங்கள் பலவற்றை நிறைவேற்றி உள்ளோம். ரெயில்வே மேம்பாலத்தை திறந்துள்ளோம். ஸ்மார்ட் சிட்டி திட்டம், குடிநீர் திட்டம், சாகர்மாலா திட்டம், சுற்றுலா மேம்பாட்டு திட்டம் உள்ளிட்ட பல்வேறு வளர்ச்சி திட்டங்களை செயல்படுத்த மத்திய அரசிடம் ஒப்புதல் பெற்றுள்ளோம்.

புதுவை மாநிலத்தின் வருமானத்தையும் பெருக்கி உள்ளோம். கடந்த கால என்.ஆர்.காங்கிரஸ் ஆட்சியில் அரசு ஊழியர்களுக்கு சம்பளம் போடுவது, முதியோர், சென்டாக் நிதியுதவி வழங்குவதில் பிரச்சினை இருந்தது. ஆனால் நாங்கள் அனைத்தையும் சரியான நேரத்தில் வழங்கி வருகிறோம். கவர்னர் கிரண்பெடி இலவச அரிசி வழங்குவதற்கு முட்டுக்கட்டை போடுவதால் அரிசி வழங்க முடியவில்லை.

அரிசிக்கு பதிலாக பணமாக வழங்க கோப்பு அனுப்பினாலும் அதற்கும் அனுமதி தராமல் 20 நாட்களாக கோப்பை வைத்துள்ளார். கடந்த பட்ஜெட் நிதியில் 95 சதவீதத்தை செலவிட்டுள்ளோம். மத்திய அரசிடமிருந்து புதுச்சேரிக்கு கிடைக்க வேண்டிய நிதியும் கிடைக்கவில்லை. மத்திய அரசு மாநிலங்களுக்கு 42 சதவீத நிதியை தருகிறது. ஆனால் புதுச்சேரிக்கு 26 சதவீத நிதியைத்தான் வழங்குகிறது. ஓய்வுபெற்ற ஊழியர்களுக்கான ஓய்வூதியத் தொகைக்கான நிதியையும் தரவில்லை. மாற்றாந்தாய் மனப்பான்மையோடு புதுச்சேரியை பார்க்கிறது.

புதுவையில் எதிர்க்கட்சிகளும் எதிரிக்கட்சிகளாக செயல்படுகின்றன. மக்களுக்கான நலத்திட்டங்களுக்கு ஒத்துழைப்பு தந்து, தவறாக செயல்பட்டால் தட்டி கேட்கவேண்டும். ஆனால் இவை இரண்டையும் எதிர்க்கட்சிகள் செய்வதில்லை. நான் தப்பித்தவறி முதல்-அமைச்சராக வந்துவிட்டதாக எதிர்க்கட்சி தலைவர் ரங்கசாமி கூறியுள்ளார். அதனால்தான் புதுச்சேரி தப்பித்தது. இல்லாவிட்டால் குட்டிச்சுவர் ஆகியிருக்கும்.

காமராஜ் நகர் தொகுதியில் 6 தேர்தல் பணிக்குழுக்களை அமைத்து நாங்கள் வாக்கு சேகரித்து வருகிறோம். அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள், கூட்டணி கட்சி தலைவர்கள் ஒருங்கிணைந்து தேர்தல் பணி செய்து வருகிறோம். இதனால் காங்கிரஸ் வேட்பாளர் ஜான்குமார் அமோக வெற்றிபெறுவார். வைத்திலிங்கம் செய்த பணிகள், மாநிலத்தை வளர்ச்சி பாதைக்கு அழைத்து செல்லும் அரசின் செயல்பாடு ஆகியவற்றால் நாங்கள் அமோக வெற்றிபெறுவோம்.

எங்கள் ஆட்சியில் புதுச்சேரி அமைதியாக உள்ளது. மக்கள் நிம்மதியாக வாழ்வதை நாங்கள் உறுதி செய்துள்ளோம். ரவுடிகள் வர்த்தகர்களிடம் மாமூல் கேட்பதை நிறுத்தி உள்ளோம். குற்றவாளிகளை கைது செய்து சிறையில் அடைத்துள்ளோம். எங்களுடன் தொகுதியில் உள்ள கூட்டணி கட்சியினர்தான் வந்து வாக்கு சேகரிக்கின்றனர்.

ஆனால் எதிர்தரப்பில் அவர்களுக்கு இந்த தொகுதியில் ஆட்கள் இல்லாததால் திலாசுப்பேட்டை மற்றும் பிற பகுதிகளில் இருந்து ஆட்களை அழைத்து வந்து வாக்குசேகரிக்கின்றனர்.

இவ்வாறு நாராயணசாமி கூறினார்.

Next Story