திருப்பூரில் தொழிலாளி கொலை வழக்கில் தாய் உள்பட 2 பேர் கைது


திருப்பூரில் தொழிலாளி கொலை வழக்கில் தாய் உள்பட 2 பேர் கைது
x
தினத்தந்தி 12 Oct 2019 11:00 PM GMT (Updated: 12 Oct 2019 7:39 PM GMT)

திருப்பூரில் தொழிலாளி கொலை வழக்கில் அவரது தாய் உள்பட 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

திருப்பூர்,

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையை சேர்ந்தவர் பாண்டியன் (வயது 45). பனியன் நிறுவன தொழிலாளி. இவருக்கு மனைவியும் 2 மகன்களும் உள்ளனர். தனது மனைவியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அவரை பிரிந்து திருப்பூருக்கு வந்தார். இதன் பின்னர் கடந்த 3 ஆண்டுகளாக திருப்பூர் கே.வி.ஆர்.நகர் அருகே உள்ள ஜீவாநகரில் தனது தாயார் முருகாயியுடன் (60) வசித்து வந்தார். முருகாயி டாஸ்மாக் கிளப்பில் துப்புரவு தொழிலாளி வேலை செய்தார். இதில் கிடைக்கும் வருமானத்தை வைத்து இருவரும் வாழ்ந்து வந்தனர். பாண்டியனுக்கு குடிப்பழக்கம் இருந்து வந்துள்ளது. இதனால் தினமும் மதுகுடித்து விட்டு வீட்டிற்கு வருவதை வாடிக்கையாக கொண்டுள்ளார்.

இந்நிலையில் கடந்த 3 மாதமாக பாண்டியன் வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்தபடியே குடித்து வந்துள்ளார். இதற்கிடையே கடந்த 2 நாட்களுக்கு முன்பு பாண்டியன் வீட்டில் ரத்த காயங்களுடன் பிணமாக கிடந்தார். இது குறித்து திருப்பூர் மத்திய போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருப்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர். மேலும், இந்த கொலை வழக்கு தொடர்பாக போலீஸ் உதவி கமிஷனர் நவீன்குமார் (தெற்கு) மேற்பார்வையில், மத்திய போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) பிரகாஷ் தலைமையில், சப்-இன்ஸ்பெக்டர்கள் முத்துக்குமார், ராஜேஷ்குமார் ஆகியோர் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டு விசாரணை நடைபெற்றது. அப்போது இந்த கொலையை செய்தது முருகாயி மற்றும் பாண்டியனின் சகோதரர் ஜெயச்சந்திரன் (53) ஆகியோர் என்பது தெரியவந்தது.

சம்பவத்தன்று முருகாயிடம் வேலைக்கு செல்வதாக்கூறி பாண்டியன் பணம் பெற்றுள்ளார். ஆனால் வேலைக்கு செல்லாமல் அந்த பணத்தை முழுவதும் குடித்து அவர் செலவழித்துள்ளார். இது குறித்து முருகாயி கேட்டபோது அவரை தாக்கியுள்ளார். இதனால் அவர் இது குறித்து அந்த பகுதியில் வசித்து வரும் தனது மூத்த மகன் ஜெயச்சந்திரனிடம் (53) தெரிவித்துள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த இருவரும் சென்று செங்கல் மற்றும் கத்தி உள்ளிட்டவையால் பாண்டியனை தாக்கியுள்ளனர். இதில் அவர் ரத்த வெள்ளத்தில் பிணமானது தெரியவந்தது. இதனைத்தொடர்ந்து ஜெயச்சந்திரன் மற்றும் முருகாயி ஆகிய 2 பேரையும் மத்திய போலீசார் கைது செய்தனர். ஜெயச்சந்திரன் தனது மகளுக்கு திருமணம் நிச்சயித்து 2 மாதத்தில் திருமணம் நடைபெற இருந்த நிலையில் தற்போது அவர் கைது செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Next Story