வெடி விபத்தில் சிக்கி காயமடைந்த பட்டாசு ஆலை பெண் உரிமையாளர் சாவு; பலி எண்ணிக்கை 4 ஆனது


வெடி விபத்தில் சிக்கி காயமடைந்த பட்டாசு ஆலை பெண் உரிமையாளர் சாவு; பலி எண்ணிக்கை 4 ஆனது
x
தினத்தந்தி 12 Oct 2019 11:00 PM GMT (Updated: 12 Oct 2019 8:17 PM GMT)

புதுவை அருகே நடந்த வெடி விபத்தில் படுகாயமடைந்த பட்டாசு ஆலை பெண் உரிமையாளர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனால் பலி எண்ணிக்கை 4 ஆனது.

புதுச்சேரி,

புதுவை அரியாங்குப்பம் மணவெளியை சேர்ந்தவர் குணசுந்தரி (வயது 45). இவருக்கு சொந்தமான பட்டாசு ஆலை பாகூர் அருகே உள்ள கரையாம்புத்தூர் அய்யனார் கோவில் ஏரிக்கரையில் உள்ளது. தீபாவளி பண்டிகையையொட்டி பட்டாசு தயாரிப்பில் தொழிலாளர்கள் மும்முரமாக ஈடுபட்டிருந்தனர். இந்த நிலையில் நேற்று முன் தினம் மதியம் பட்டாசுகள் வெடித்ததில் அங்கு வேலை பார்த்துக் கொண்டிருந்த விழுப்புரம் சொர்ணாவூரைச் சேர்ந்த தீபா, கரையாம்புத்தூர் வரலட்சுமி ஆகியோர் அந்த இடத்திலேயே உடல் சிதறி பலியானார்கள்.

பட்டாசு ஆலை உரிமையாளர் குணசுந்தரி, கிருஷ்ணாபுரத்தை சேர்ந்த வைத்தீஸ்வரி (27), கரையாம்புத்தூர் கலாமணி (45) ஆகிய பெண்களை உயிருக்கு ஆபத்தான நிலையில் மீட்டு புதுவையில் உள்ள அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி வைத்தீஸ்வரி இறந்து போனார்.

தொடர்ந்து பட்டாசு ஆலையின் உரிமையாளர் குணசுந்தரி, கலாமணி ஆகியோருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இவர்களில் குணசுந்தரி நேற்று மதியம் பரிதாபமாக உயிரிழந்தார். கலாமணி சிகிச்சையில் இருந்து வருகிறார்.

முன்னதாக அரசு ஆஸ்பத்திரிக்கு முதல்-அமைச்சர் நாராயணசாமி, அமைச்சர் கந்தசாமி, விஜயவேணி எம்.எல்.ஏ. ஆகியோர் வந்தனர். குணசுந்தரி, கலாமணி ஆகியோரது குடும்பத்தினருக்கு அவர்கள் ஆறுதல் தெரிவித்தனர்.

Next Story