சின்னசேலத்தில் விவசாயி திடீர் சாவு


சின்னசேலத்தில் விவசாயி திடீர் சாவு
x
தினத்தந்தி 12 Oct 2019 11:00 PM GMT (Updated: 12 Oct 2019 8:20 PM GMT)

சின்னசேலத்தில் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட விவசாயி திடீரென இறந்தார். இதனால் ஆத்திரமடைந்த அவரது உறவினர்கள் தனியார் மருத்துவமனை மீது நடவடிக்கை எடுக்கக்கோரி மறியலில் ஈடுபட்டனர்.

சின்னசேலம், 

சின்னசேலம் அருகே உள்ள கீழ்குப்பம் வடக்குகாட்டுக்கொட்டாய் பகுதியை சேர்ந்தவர் பெரியசாமி (வயது 62), விவசாயி. இவரது மனைவி அலமேலு. இவர்களுக்கு 2 மகன்களும், 2 மகள்களும் உள்ளனர். கடந்த 2 நாட்களுக்கு முன்பு பெரியசாமி காய்ச்சலால் பாதிக்கப்பட்டார். இதையடுத்து அவர் சின்னசேலத்தில் மூங்கில்பாடி சாலையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற்றார். இருப்பினும் காய்ச்சல் குணமாகவில்லை என தெரிகிறது.

இந்த நிலையில் நேற்று காலை பெரியசாமியை அவரது மகன் கார்த்திகேயன்(28) மோட்டார் சைக்கிளில் ஏற்றிக்கொண்டு அதே மருத்துவமனைக்கு சென்றார். அங்கு அவருக்கு ‘குளுக்கோஸ்’ ஏற்றப்பட்டது. அப்போது அவரது உடல்நிலை மிகவும் மோசமானதாக தெரிகிறது. இதையடுத்து அங்கிருந்த மருத்துவமனை ஊழியர்கள் அவசர அவசரமாக பெரியசாமியை ஆம்புலன்ஸ் மூலம் சின்னசேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள், பெரியசாமி ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதை கேட்டு ஆத்திரமடைந்த உறவினர்கள் தனியார் மருத்துவமனையில் பெரியசாமிக்கு தவறான சிகிச்சை அளிக்கப்பட்டதால் தான் அவர் இறந்து விட்டதாக கூறி, அந்த மருத்துவமனையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் மருத்துவமனை முன்பு சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

இதுபற்றி தகவல் அறிந்த சின்னசேலம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஜம்புலிங்கம் தலைமையிலான போலீசார் விரைந்து வந்து, போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது அவர்கள், பெரியசாமியின் சாவுக்கு காரணமான தனியார் மருத்துவமனை நிர்வாகத்தினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறினர். அதற்கு போலீசார், இதுதொடர்பாக உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தனர். அதன் பேரில் பெரியசாமியின் உறவினர்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். தொடர்ந்து இதுதொடர்பாக போலீசார் சந்தேக மரணம் என வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story