செங்குன்றம் அருகே ஆட்டோ டிரைவர் கொலை வழக்கில் 3 பேர் கைது


செங்குன்றம் அருகே ஆட்டோ டிரைவர் கொலை வழக்கில் 3 பேர் கைது
x
தினத்தந்தி 13 Oct 2019 11:30 PM GMT (Updated: 13 Oct 2019 5:51 PM GMT)

செங்குன்றம் அருகே ஆட்டோ டிரைவரை கொலை செய்த வழக்கில், 3 வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர்.

செங்குன்றம்,

சென்னை அடுத்த மாங்காடு, கோவூர் அம்பாள் நகர், கம்பர் தெருவைச் சேர்ந்தவர் முரளி (வயது 33). ஆட்டோ டிரைவர். இவருக்கு திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளனர். இவர் கடந்த 6-ந் தேதி செங்குன்றத்தை அடுத்த பம்மதுகுளம் எல்லம்மன் பேட்டை அருகே மீஞ்சூர்-வண்டலூர் 400 அடி வெளிவட்ட சாலை அருகே ஆட்டோவில் பிணமாக கிடப்பதாக செங்குன்றம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த இன்ஸ்பெக்டர் ஜவஹர் பீட்டர் மற்றும் போலீசார் பிணத்தை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதைத்தொடர்ந்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் வந்த பிரேத பரிசோதனை அறிக்கையில் முரளி மாரடைப்பால் இறக்கவில்லை என்றும், அவரை அடித்துக்கொன்றதால் இறந்துள்ளார் என்பதும் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தினர். பின்பு கொலை நடந்த இடத்தை சுற்றியுள்ள பகுதிகளில் இருந்த கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்தனர்.

அதன்பேரில் நடைபெற்ற விசாரணையில், பட்டாபிராம் நவஜீவன் நகர் 2-வது தெருவை சேர்ந்த லாரி உரிமையாளர் மகேஷ் (32), அவரது மைத்துனரான அதே பகுதியை சேர்ந்த அருண்குமார் (23), பட்டாபிராம் அண்ணா நகர் 8-வது தெருவைச் சேர்ந்த பஸ் டிரைவரான சம்பத் (30) ஆகிய 3 பேர் கொலை செய்தது தெரியவந்தது.

பின்பு அவர்களிடம் நடத்திய விசாரணையில், கடந்த 6-ந் தேதி நள்ளிரவில் மகேசுக்கு சொந்தமான லாரியை பட்டாபிராம் அருகே நிறுத்தி வைத்திருந்த போது, ஆட்டோ டிரைவர் முரளி அந்த லாரியில் இருந்து பேட்டரியை திருடி கொண்டிருந்ததாகவும், அதை பார்த்த மகேஷ், அருண்குமார் மற்றும் சம்பத் ஆகிய 3 பேரும் முரளியை சரமாரியாக அடித்ததில், அவர் இறந்துவிட்டார் என்பதும் தெரியவந்தது.

இதைத்தொடர்ந்து, அவர்கள் 3 பேரும் முரளியின் ஆட்டோவிலேயே அவர் உடலை வைத்து செங்குன்றம் அருகே உள்ள எல்லம்மன் பேட்டைக்கு சென்று ஆட்டோவை விட்டு நிறுத்தி வந்தது விசாரணையில் தெரிய வந்தததாக போலீசார் தெரிவித்தனர். இதையடுத்து, செங்குன்றம் போலீசார் அவர்கள் 3 பேர் மீதும் கொலை வழக்குப்பதிவு செய்து, அவர்களை கைது செய்து பொன்னேரி கோர்ட்டில் ஆஜர்படுத்தி புழல் ஜெயிலில் அடைத்தனர்.

இறந்து போன முரளி மீது லாரிகளில் பேட்டரி திருடியது சம்பந்தமாக மாங்காடு, பூந்தமல்லி ஆகிய போலீஸ் நிலையங்களில் ஏற்கனவே வழக்குகள் இருப்பதும் தெரியவந்தது.

Next Story