தீபாவளி பண்டிகைக்கு ஆடைகள் வாங்க கும்பகோணத்தில் அலைமோதிய மக்கள் கூட்டம்


தீபாவளி பண்டிகைக்கு ஆடைகள் வாங்க கும்பகோணத்தில் அலைமோதிய மக்கள் கூட்டம்
x
தினத்தந்தி 13 Oct 2019 10:30 PM GMT (Updated: 13 Oct 2019 8:24 PM GMT)

தீபாவளி பண்டிகைக்கு ஆடைகள் வாங்க கும்பகோணதத்ல் மக்கள் கூட்டம் அலைமோதியது. திருட்டை தடுக்க போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.

கும்பகோணம்,

இந்துக்களின் முக்கிய பண்டிகைகளில் தீபாவளியும் ஒன்று. தீபாவளி பண்டிகையை பெரியவர்கள் முதல் சிறுவர்கள் வரை

புத்தாடை அணிந்தும், பட்டாசு வெடித்தும் கொண்டாடுவார்கள். இந்த ஆண்டு தீபாவளி பண்டிகை வருகிற 27-ந்தேதி(ஞாயிற்றுக்கிழமை) கொண்டாடப்பட உள்ளது. இதை முன்னிட்டு கும்பகோணம் மற்றும் அதை சுற்றியுள்ள ஊர்களில் இருந்து பொதுமக்கள் தங்களது குடும்பத்துடன் வந்து தங்களுக்கு தேவையான ஆடைகளை வாங்கி செல்கின்றனர்.

நேற்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை என்பதால் ஆடைகள் மற்றும் பொருட்கள் வாங்க கும்பகோணம் ஆயிகுளம் கடைத்தெருவில் உள்ள ஜவுளி கடைகளில் பொதுமக்கள் கூட்டம் அலைமோதியது. இதனால், கும்பகோணம்-தஞ்சை சாலையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. கும்பகோணம் போலீஸ் துணை கண்காணிப்பாளர் ஜெய்ச்சந்திரன் தலைமையில் போக்குவரத்து போலீசார் மற்றும் போலீசார் போக்குவரத்தை சீர்செய்து கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

50 கேமராக்கள்

இது குறித்து கும்பகோணம் போலீஸ்துணை சூப்பிரண்டு ஜெயச்சந்திரன் கூறுகையில்:-

கும்பகோணம் நகர பகுதியில் தற்போது 300 கண்காணிப்பு கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்பட்டு வருகிறது. தீபாவளி பண்டிகையையொட்டி முக்கிய கடைத்தெரு பகுதியில் கூடுதலாக 50 கண்காணிப்பு கேமராக்கள் அமைக்கப்பட்டு கண்காணிக்கப்படும். எனவே, ஆடைகள் வாங்க வரும் பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். சந்தேகப்படும் நபர்கள் இருந்தால் உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என்றார்.

Next Story