அரசு, தனியார் மருத்துவமனைகளில் டெங்கு காய்ச்சல் அறிகுறியுடன் 36 பேர் அனுமதி


அரசு, தனியார் மருத்துவமனைகளில் டெங்கு காய்ச்சல் அறிகுறியுடன் 36 பேர் அனுமதி
x
தினத்தந்தி 14 Oct 2019 10:30 PM GMT (Updated: 14 Oct 2019 7:17 PM GMT)

அரசு, தனியார் மருத்துவமனைகளில் டெங்கு காய்ச்சல் அறிகுறியுடன் 36 பேர் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

தஞ்சாவூர்,

தஞ்சை மாவட்டத்தில் டெங்கு காய்ச்சல் பரவுவதை தடுக்க மாவட்ட நிர்வாகம், மாநகராட்சி நிர்வாகம் சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. பொதுமக்களிடம் டெங்கு காய்ச்சல் தடுப்பு குறித்து பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளும் நடத்தப்பட்டு வருகின்றன. இருந்தாலும் திடீர் மழை, வெயில் என பருவகால மாறுதல் காரணமாக குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை காய்ச்சல் ஏற்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைகளை தேடி செல்லும் நிலை உள்ளது.

தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனை, ராசாமிராசுதார் அரசு மருத்துவமனை, கும்பகோணம் தலைமை மருத்துவமனை, பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனை உள்ளிட்ட தஞ்சை மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனைகளில் காய்ச்சல் காரணமாக 297 பேர் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தனியார் மருத்துவமனைகளில் 83 பேர் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

டெங்கு அறிகுறி

டெங்கு காய்ச்சல் அறிகுறியுடன் 27 பேர் அரசு மருத்துவமனைகளிலும், 9 பேர் தனியார் மருத்துவமனைகளிலும் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் பெரும்பாலானோர் நாகை, திருவாரூர், அரியலூர் மாவட்டங்களை சேர்ந்தவர்கள். இவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தஞ்சை மாவட்டத்தில் இதுவரை காய்ச்சல் காரணமாக உயிரிழப்பு எதுவும் ஏற்படவில்லை. 100-க்கும் மேற்பட்டோர் காய்ச்சலுக்காக சிகிச்சை பெற்று குணம் அடைந்து வீடு திரும்பியுள்ளனர் என அரசு டாக்டர்கள் தெரிவித்தனர்.

டெங்கு கொசுப்புழுவை ஒழிப்பதற்காக வீடு, வீடாக களப்பணியாளர்கள் சென்று ஆய்வு பணியை மேற்கொண்டு வருகின்றனர். அப்போது அவர்கள், வீடுகளின் உட்புறம் மற்றும் சுற்றுப்புறங்களில் மழைநீர் தேங்காத வண்ணம் பராமரிக்க வேண்டும் எனவும், வீடுகளில் டெங்கு கொசுப்புழு இருப்பது கண்டறியப்பட்டால் உரிமையாளர்களுக்கு ரூ.500 முதல் ரூ.5 ஆயிரம் வரையும், வணிக நிறுவனங்கள், பள்ளிகள், கல்லூரிகள், மருத்துவமனைகளில் டெங்கு கொசுப்புழு இருப்பது தெரியவந்தால் ரூ.5 ஆயிரம் முதல் ரூ.50 ஆயிரம் வரையும் அபராதம் விதிக்கப்படும் எனவும் எச்சரிக்கை விடுத்து வருகின்றனர்.

மருத்துவக்கல்லூரி முதல்வர்

தஞ்சை மருத்துவக்கல்லூரி முதல்வர் குமுதாலிங்கராஜ் கூறும்போது, தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் காய்ச்சல் காரணமாக 71 பேரும், டெங்கு காய்ச்சல் அறிகுறியுடன் 3 பேரும் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ராசாமிராசுதார் அரசு மருத்துவமனையில் 6 பேர் டெங்கு காய்ச்சால் அறிகுறியுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர். மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க கொசு வலைகளுடன் சிறப்பு வார்டு ஏற்படுத்தப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு தனி வார்டு அமைக்கப்பட்டுள்ளது. அதுபோக காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க 2 வார்டுகள் அமைக்கப்பட்டுள்ளன. நிலவேம்பு கசாயம், கஞ்சி போன்றவைகளும் வழங்கப்பட்டு வருகிறது. காய்ச்சலால் பாதிக்கப்பட்டு வருபவர்களுக்காக தனியாக புறநோயாளிகள் சிகிச்சை பிரிவு ஏற்படுத்தி இருக்கிறோம் என்றார்.

Next Story