மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் ஆதார், ரே‌‌ஷன் கார்டு உள்ளிட்ட ஆவணங்களை ஒப்படைக்க வந்த பொதுமக்களால் பரபரப்பு


மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் ஆதார், ரே‌‌ஷன் கார்டு உள்ளிட்ட ஆவணங்களை ஒப்படைக்க வந்த பொதுமக்களால் பரபரப்பு
x
தினத்தந்தி 14 Oct 2019 10:45 PM GMT (Updated: 14 Oct 2019 8:13 PM GMT)

புதுக்கோட்டையில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் ஆதார், ரே‌‌ஷன் கார்டு உள்ளிட்ட ஆவணங்களை ஒப்படைக்க வந்த பொதுமக்களால் பரபரப்பு ஏற்பட்டது.

புதுக்கோட்டை,

புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட கலெக்டர் உமாமகேஸ்வரி தலைமை தாங்கி பொதுமக்களிடம் இருந்து மனுக்களை பெற்றுக்கொண்டார். அப்போது விலையில்லா வீட்டுமனைப் பட்டா, பட்டா மாறுதல் உள்பட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 420 மனுக்கள் பெறப்பட்டன. கூட்டத்தில் அரசு அதிகாரிகள் மற்றும் அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

ஊதியம் வழங்கக்கோரி மனு

கூட்டத்தில் புதுக்கோட்டை மாவட்டம் சேரனூர் ஊராட்சி முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் காமராஜ் தலைமையில் 100 நாள் திட்ட பணியாளர்கள் கொடுத்த மனுவில், சேரனூர் கிராமத்தில் 100 நாள் வேலை திட்டத்தில் 100-க்கும் மேற்பட்ட பெண்கள் பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில் அந்த பெண்களுக்கு கடந்த ஏப்ரல், மே, ஜூன், ஜூலை, ஆகஸ்டு ஆகிய 5 மாத காலமாக ஊதியம் வழங்கவில்லை. ஊதியம் வழங்க கோரி ஊராட்சி அலுவலகத்தில் கேட்டால் முறையான பதில் இல்லை. ஊதியத்திற்காக பலமுறை பல்வேறு இடங்களில் புகார் அளித்தும் இதுவரை எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே இது குறித்து கலெக்டர் உடனடியாக நடவடிக்கை எடுத்து எங்களுக்கு ஊதியம் கிடைக்க வழிவகை செய்ய வேண்டும் என கூறியிருந்தனர்.

சேதமடைந்த மின்கம்பங்கள்

ஆவுடையார்கோவில் தாலுகா திருக்கல்யாணபுரம் பகுதியை சேர்ந்த பொதுமக்கள் ஆதார் அட்டை, ரே‌‌ஷன் கார்டு உள்ளிட்ட ஆவணங்களை கலெக்டர் அலுவலகத்தில் ஒப்படைத்து மனு கொடுப்பதற்காக வந்தனர். இதைத்தொடர்ந்து அவர்களிடம் போலீசார் மற்றும் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் உடன்பாடு ஏற்பட்டதை தொடர்ந்து பொதுமக்கள் கொடுத்த மனுவில், எங்கள் கிராமத்தில் 5 மின்கம்பங்கள் சேதமடைந்த நிலையில் உள்ளது. இதில் மின்கம்பங்கள் உடைந்து விழும் நிலையில் உள்ளது. மேலும் எங்கள் கிராமத்தில் தாழ்வாக மின்கம்பிகள் செல்கின்றன. இதுகுறித்து பலமுறை மின்சார வாரிய அதிகாரிகளிடம் முறையிட்டும், இதுவரை எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

அடிப்படை வசதிகள்

எங்கள் கிராமத்தில் உள்ள சுமார் 30 ஏக்கர் நிலம் தரிசு நிலமாகவே உள்ளது. இதை விவசாய நிலமாக மாற்றித்தர வேண்டும். எங்கள் கிராமத்தில் உள்ள கண்மாய் தூர்வாரி 20 ஆண்டுகளுக்கு மேல் ஆகிறது. இதனால் மடைகள் உள்ளிட்டவை தூர்ந்து போய்விட்டன. மேலும் எங்கள் கிராமத்தில் சாலை வசதி, குடிநீர் வசதி, தெருவிளக்கு வசதி உள்ளிட்ட எந்த ஒரு அடிப்படை வசதியும் செய்து கொடுக்கவில்லை. எனவே எங்கள் பகுதியில் அடிப்படை வசதிகள் செய்து கொடுக்க வேண்டும் என கூறியிருந்தனர். இதனால் ஆதார் அட்டை, ரே‌‌ஷன் கார்டு உள்ளிட்ட ஆவணங்களை கலெக்டர் அலுவலகத்தில் ஒப்படைக்க பொதுமக்கள் வந்ததால் கலெக்டர் அலுவலக வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

முதலுதவி சிகிச்சை

கூட்டத்தில், புதுக்கோட்டை மருந்தாளுனர்கள் சங்கம், சுராக்ஷா சிக்கிட்சாக் பரி‌ஷாத் உறுப்பினர்கள் கொடுத்த மனுவில், நாங்கள் கிராமப்புறங்களில் மருந்தியல் பயிற்சி விதிகளின் கீழ் பயிற்சி செய்ய அனுமதி பெற்று உள்ளோம். அனைத்து மருந்தாளுனர்கள் பொதுமக்களுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கலாம். எனவே மருந்தாளுனர் ஆகிய நாங்களும் பொதுமக்களுக்கு முதலுதவி சிகிச்சைகளை அளிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக்கூறியிருந்தனர்.

டாஸ்மாக் கடையை அகற்ற வேண்டும்

கூட்டத்தில் ஆலங்குடி தாலுகா வேங்கிடங்குளம் பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கொடுத்த மனுவில், எங்கள் கிராமத்தில் ஒரு மேல்நிலைப்பள்ளியும், 2 தொடக்கப்பள்ளியும் உள்ளன. இந்நிலையில் எங்கள் கிராமத்தில் அரசு டாஸ்மாக் கடையும் உள்ளது. அரசு டாஸ்மாக் கடை பள்ளிக்கு செல்லும் வழியில் உள்ளதால் மாணவ, மாணவிகள் மற்றும் பெண்கள் அச்சத்துடன் சென்று வருகின்றனர். எனவே எங்கள் பகுதியில் உள்ள டாஸ்மாக் கடையை அகற்ற வேண்டும் என பலமுறை மனுக்கள் கொடுத்தும் இதுவரை எந்தஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே உடனடியாக எங்கள் கிராமத்தில் உள்ள டாஸ்மாக் கடையை அகற்ற வேண்டும். டாஸ்மாக் கடையை அகற்றவில்லை என்றால் மாணவ, மாணவிகள் மற்றும் பொதுமக்கள் சார்பில் போராட்டம் நடத்தப்படும் என கூறியிருந்தனர்.

வெளிநாட்டில் சித்ரவதை

கந்தர்வகோட்டை தாலுகா ஆத்தாங்கரைவிடுதி ஆதிதிராவிடர் தெருவை சேர்ந்த ஜெயந்தி என்பவர் கொடுத்த மனுவில், எனது தாயார் ஜெயமிடம், கந்தர்வகோட்டையை சேர்ந்த லெட்சுமணன் என்பவர், அதிக சம்பளத்தில் வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக கூறினார். இதை நம்பிய எனது தயார் ரூ.60 ஆயிரத்தை லெட்சுமணனிடம் கொடுத்து உள்ளார். பணத்தை பெற்றுக்கொண்ட லெட்சுமணன் எனது தாயாரை மஸ்கட் நாட்டிற்கு வேலைக்கு அனுப்பி உள்ளார்.

பின்னர் எனது தாயார் என்னை செல்போனில் தொடர்பு கொண்டு, என்னை ஒரு அறையில் அடைத்து வைத்து சித்ரவதை செய்வதாகவும், நான் திரும்ப உயிருடன் வீட்டிற்கு வரமுடியாது எனவும் கூறினார். இதைத்தொடர்ந்து நான் லெட்சுமணனை சந்தித்து எனது தாயார் குறித்து கேட்டேன். அப்போது அவர் திருவை பாறையை சேர்ந்த அக்கீம், பாத்திமா ஆகியோருடன் சேர்ந்து கொண்டு ரூ.2 லட்சம் தந்தால்தான் உனது தாயாரை உயிருடன் பார்க்க முடியும் எனக்கூறினார். எனவே இது குறித்து கலெக்டர் நடவடிக்கை எடுத்து வெளிநாட்டில் உள்ள எனது தாயாரை இந்தியாவிற்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் எண்ணிடம் ரூ.2 லட்சம் கேட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக்கூறியிருந்தார். 

Next Story