அரசு செய்யாததை சுட்டிக்காட்டினால் பொய் பிரசாரமா? ரங்கசாமி கேள்வி


அரசு செய்யாததை சுட்டிக்காட்டினால் பொய் பிரசாரமா? ரங்கசாமி கேள்வி
x
தினத்தந்தி 14 Oct 2019 11:00 PM GMT (Updated: 14 Oct 2019 8:51 PM GMT)

அரசு செய்யாததை சுட்டிக்காட்டினால் அது பொய் பிரசாரமா? என்று எதிர்க்கட்சி தலைவர் ரங்கசாமி கேள்வி எழுப்பினார்.

புதுச்சேரி,

காமராஜ் நகர் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் என்.ஆர்.காங்கிரஸ் வேட்பாளர் புவனேஸ்வரனை ஆதரித்து என்.ஆர்.காங்கிரஸ் தலைவர் ரங்கசாமி நேற்று ரெயின்போ நகரில் வீடுவீடாக சென்று வாக்குசேகரித்தார். அவருடன் அ.தி.மு.க. சட்டமன்ற கட்சி தலைவர் அன்பழகன் எம்.எல்.ஏ., என்.ஆர்.காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் என்.எஸ்.ஜெ.ஜெயபால், டி.பி.ஆர்.செல்வம், சுகுமாறன், அ.தி.மு.க. செயலாளர் புருஷோத்தமன், துணை செயலாளர் கணேசன் மற்றும் நிர்வாகிகள் சென்றனர்.

வாக்குசேகரிப்பின்போது ரங்கசாமி நிருபர்களிடம் கூறியதாவது:-

புதுவையில் சட்டம் ஒழுங்கு சரியில்லாதது பத்திரிகைகளில் செய்தியாக வந்துகொண்டுள்ளது. அதை சரிசெய்ய வேண்டியது ஆட்சியாளர்கள்தான். ஆனால் நாங்கள் பொய்பிரசாரம் செய்வதாக எங்களை குறை கூறுகிறார்கள். இந்த அரசு எதையும் செய்யவில்லை என்பது மக்களுக்கு தெரிகிறது.

எத்தனை பேருக்கு வேலை கொடுத்தீர்கள்? எவ்வளவு தொழிற்சாலைகளை கொண்டு வந்தீர்கள்? அரசில் 9 ஆயிரம் காலிப்பணியிடங்கள் உள்ளன. அவைகளை நிரப்பினால்தானே வேலைவாய்ப்பு கிடைக்கும். கவர்னர் மற்றும் எங்கள் மீது பழியை போட்டு காலத்தை கடத்தி புதுச்சேரியை சீரழித்து வருகின்றனர். நீங்கள் செய்யாததை நாங்கள் ஏன் செய்யவில்லை? என்று கேட்டால் அது பொய்பிரசாரமா?

கடந்த காலங்களில் நாங்கள் அதிகாரம் கேட்டபோது கவர்னருடன் அனுசரித்து போக சொன்னவர்தான் முதல்- அமைச்சர் நாராயணசாமி. அப்போதைய கவர்னர் வீரேந்திர கட்டாரியாவை அழைத்து வந்து பங்க் கடையில் உட்கார வைத்தவர்தான் போகாத ஊருக்கு வழி சொல்வதைப்போல் சிறப்பு மாநில அந்தஸ்து என்ற கோஷத்தையும் எழுப்பினார்.

ஆட்சியின் கடைசியில்கூட தரமான மிக்சி கிரைண்டரை மக்களுக்கு கொடுத்தோம். அதை ரோட்டில் போட்டு உடைத்தனர். அத்தகைய 4-ம் தர அரசியல்வாதி நாங்கள் அல்ல.

இவ்வாறு ரங்கசாமி கூறினார்.

அன்பழகன் எம்.எல்.ஏ. கூறியதாவது:-

புதுவையில் கவர்னர், முதல்-அமைச்சர் மோதல் போக்கினால் அவ்வப்போது சட்டம் ஒழுங்கு சீர்குலைவது வழக்கமான ஒன்றாக உள்ளது. கவர்னருக்கே பாதுகாப்பற்ற சூழ்நிலையை காங்கிரஸ் அரசு உருவாக்கியுள்ளது. இதனால் கவர்னரின் பாதுகாப்புக்காக ஏனாமிற்கு ஆந்திர மாநில போலீசார் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

புதுச்சேரியில் இதுபோன்ற நிலை இருப்பதை மத்திய அரசு கருத்தில்கொள்ள வேண்டும். நீதிமன்ற தீர்ப்புக்குப்பின் 90 சதவீத கோப்புகளை கவர்னருக்கு அனுப்புவதில்லை என்று முதல்-அமைச்சர் கூறுகிறார். இருந்தும் திட்டங்களை கவர்னர் தடுப்பதாக ஏன் பொய் சொல்கிறார்?

பட்ஜெட்டில் நிதி ஒதுக்கியும் திட்டங்களை செயல்படுத்தாதது முதல்-அமைச்சரின் பலவீனத்தை காட்டுகிறது. இலவச அரிசி ஏன் போடவில்லை? என்று கேட்டதற்காக எதிர்க்கட்சி தலைவருக்கு ஒன்றும் தெரியாது என்று முதல்-அமைச்சர் கூறுகிறார். வாக்களித்த மக்களுக்கு எதை செய்ய வேண்டுமோ அதை செய்தவர் ரங்கசாமி.

தேர்தல் காலங்களில் கவர்னரை எதிர்ப்பது முதல்-அமைச்சருக்கு வழக்கமான ஒன்றாக உள்ளது. தேர்தல் முடிந்ததும் கவர்னர் மாளிகைக்கு சென்று நட்பு பாராட்டி தேனீர் அருந்துவார். இவர்களது இயலாமையை மறைப்பதற்காக கவர்னர், எதிர்க்கட்சியினர் மீது குற்றம் சுமத்துவதை வாடிக்கையாக வைத்துள்ளார்.

இவ்வாறு அன்பழகன் எம்.எல்.ஏ. கூறினார்.

Next Story