குரோம்பேட்டை அருகே லாரி சக்கரத்தில் சிக்கி டிரைவர் சாவு; பிரேக் பிடிக்காததால் கீழே குதித்து கல் வைத்தபோது பரிதாபம்


குரோம்பேட்டை அருகே லாரி சக்கரத்தில் சிக்கி டிரைவர் சாவு; பிரேக் பிடிக்காததால் கீழே குதித்து கல் வைத்தபோது பரிதாபம்
x
தினத்தந்தி 14 Oct 2019 11:00 PM GMT (Updated: 14 Oct 2019 9:49 PM GMT)

குரோம்பேட்டை அருகே, பிரேக் பிடிக்காத லாரியை நிறுத்துவதற்காக கீழே குதித்து சக்கரத்தில் கல் வைத்தபோது லாரி சக்கரத்தில் சிக்கி டிரைவர் பரிதாபமாக இறந்தார்.

தாம்பரம்,

திருவண்ணாமலை மாவட்டம் புலிவலம் கிராமத்தைச் சேர்ந்தவர் முருகன்(வயது 43). லாரி டிரைவர். இவர், வேலூர் மாவட்டம் ராணிப்பேட்டையில் இருந்து பதப்படுத்தப்பட்ட தோல்களை ஏற்றிக்கொண்டு, சென்னையை அடுத்த குரோம்பேட்டை அருகே உள்ள நாகல்கேணியில் உள்ள தொழிற்சாலைக்கு நேற்று காலை வந்தார்.

நாகல்கேணி, பிள்ளையார் கோவில் தெருவில் சென்றபோது லாரியில் திடீரென பிரேக் பழுதானது. எவ்வளவு முயன்றும் லாரியை நிறுத்த முடியவில்லை. இதனால் டிரைவர் முருகன், மெதுவாக ஊர்ந்து சென்ற லாரியில் இருந்து கீழே குதித்து, அருகில் இருந்த பெரிய கல்லை எடுத்து, லாரியின் முன்பக்க சக்கரத்தில் போட்டு நிறுத்த முயன்றார்.

அப்போது எதிர்பாராதவிதமாக லாரி முருகனின் மீது ஏறி இறங்கியது. லாரி சக்கரத்தில் சிக்கிய முருகன், அதே இடத்தில் உடல் நசுங்கி பரிதாபமாக இறந்தார். தொடர்ந்து ஓடிய லாரி, அருகே இருந்த தொழிற்சாலை சுற்றுச்சுவர் மீது மோதி நின்றது.

இந்த விபத்து குறித்து குரோம்பேட்டை போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Next Story