காஞ்சீபுரம் அருகே காரை வழிமறித்து கத்திமுனையில் பெண் டாக்டரிடம் நகை-பணம் பறிப்பு


காஞ்சீபுரம் அருகே காரை வழிமறித்து கத்திமுனையில் பெண் டாக்டரிடம் நகை-பணம் பறிப்பு
x
தினத்தந்தி 14 Oct 2019 10:30 PM GMT (Updated: 14 Oct 2019 10:13 PM GMT)

காஞ்சீபுரம் அருகே காரை வழிமறித்து பெண் டாக்டரிடம் கத்தி முனையில் 10 பவுன் தங்க நகைகள் மற்றும் பணத்தை வழிப்பறி செய்த மர்ம கும்பலை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

காஞ்சீபுரம்,

காஞ்சீபுரம் பெருமாள் நாயக்கன் தெருவில் வசிப்பவர் இளங்கோவன். இவரது மனைவி ஏஞ்சலின் ஜெஸ்ஸி (வயது 50). டாக்டரான இவர் அங்கு தனியார் கிளினிக் ஒன்றை நடத்தி வருகிறார்.

இந்த நிலையில் ஏஞ்சலின் ஜெஸ்ஸி வழக்கம்போல் தனது காரில் அவரது கிளினிக்கிற்கு சென்றுவிட்டு, நேற்று முன்தினம் இரவு வீட்டிற்கு திரும்பி கொண்டிருந்தார். காரை அவரது டிரைவர் ஓட்டி வந்தார். வையாவூர் கவுரி அம்மன் பேட்டை பாலம் அருகில் வந்து கொண்டிருந்தபோது, திடீரென மோட்டார் சைக்கிளில் வந்த 3 பேர் கொண்ட கும்பல் காரை வழிமறித்தது.

பின்னர், காரில் இருந்த ஏஞ்சலின் ஜெஸ்ஸியிடம் கத்தியை காட்டி மிரட்டி அவரிடம் இருந்த தங்க சங்கிலி, வளையல் மற்றும் மோதிரம் உட்பட 10 பவுன் நகை மற்றும் ரூ.15 ஆயிரத்தை பறித்துகொண்டு தப்பி ஓடிவிட்டனர்.

மேலும் தப்பிசெல்லும் முன்பு கார் கண்ணாடியை அந்த மர்ம கும்பல் உடைத்தது. இதில், காரில் இருந்த டிரைவர் மற்றும் ஏஞ்சலின் ஜெஸ்ஸி ஆகியோருக்கு எவ்வித காயமும் ஏற்படவில்லை.

இதுகுறித்து ஏஞ்சலின் ஜெஸ்ஸி காஞ்சீபுரம் தாலுகா போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் பாஸ்கர் வழக்குப்பதிவு செய்து சம்பவம் நடந்த இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினார். இந்த வழிப்பறிக்கு காரணமான மர்ம கும்பலை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

Next Story