நாங்குநேரி பிரசாரத்திற்கு வந்த போது கார் மீது லாரி மோதல்; அ.தி.மு.க. நிர்வாகிகள் 5 பேர் படுகாயம் - அமைச்சர் விஜயபாஸ்கர் ஆறுதல்


நாங்குநேரி பிரசாரத்திற்கு வந்த போது கார் மீது லாரி மோதல்; அ.தி.மு.க. நிர்வாகிகள் 5 பேர் படுகாயம் - அமைச்சர் விஜயபாஸ்கர் ஆறுதல்
x
தினத்தந்தி 14 Oct 2019 10:45 PM GMT (Updated: 14 Oct 2019 10:25 PM GMT)

நாங்குநேரி பிரசாரத்திற்கு வந்த போது கார் மீது லாரி மோதியதில் அ.தி.மு.க. நிர்வாகிகள் 5 பேர் படுகாயம் அடைந்தனர்.

நெல்லை, 

நாங்குநேரி சட்டசபை தொகுதிக்கான இடைத்தேர்தல் வருகிற 21-ந்தேதி நடக்கிறது. இந்த தேர்தலுக்கு பணி செய்ய பல்வேறு கட்சிகளை சேர்ந்த நிர்வாகிகள் பல ஊர்களில் இருந்து நாங்குநேரி தொகுதிக்கு வந்து உள்ளனர்.

இந்த நிலையில் புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த அ.தி.மு.க. நிர்வாகிகள் புதுக்கோட்டை அ.தி.மு.க. அவைதலைவர் லூர்துசாமி (வயது 62) என்பவர் தலைமையில், வாடியூரை சேர்ந்த கணேசன்(59), சோத்துபாளையத்தை சேர்ந்த கலியபெருமாள்(65), ஆதனக்கோட்டையை சேர்ந்த கோவிந்தராஜ்(51), புதுக்கோட்டை கணே‌‌ஷ்நகரை சேர்ந்த சரவணன்(30) ஆகிய 5 பேரும் புதுக்கோட்டையில் இருந்து நாங்குநேரிக்கு, ஒரு காரில் வந்து கொண்டு இருந்தனர்.

காரை சரவணன் ஓட்டிவந்தார். பாளையங்கோட்டை சீனிவாசநகர் அருகே பாலத்தில் வந்தபோது அந்த வழியாக வந்த லாரி எதிர்பாராதவிதமாக கார் மீது மோதியது.

இந்த விபத்தில் காரில் பயணம் செய்த லூர்துசாமி, கணேசன், கலியபெருமாள், சரவணன், கோவிந்தராஜ் ஆகிய 5 பேரும் படுகாயம் அடைந்தனர். காயம் அடைந்தவர்களை த.மு.மு.க. மருத்துவ அணி செயலாளர் ஜெய்லானி, உப்பு அருள்ராஜ் ஆகியோர் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.இதுகுறித்து நெல்லை மாநகர போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் வேல்கனி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

இந்த நிலையில் விபத்தில் காயம் அடைந்து பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வரும் அ.தி.மு.க. நிர்வாகிகள் 5 பேரையும் தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் விஜயபாஸ்கர், பார்த்து ஆறுதல் கூறினார். மேலும் அவர்களுக்கு நல்ல முறையில் சிகிச்சை அளிக்கவேண்டும் என்று டீன் (பொறுப்பு) ரவிச்சந்திரன், டாக்டர்கள் சாந்தாராம், நிர்மல்குமார், மணிகண்டன், திருமலைகுமார் ஆகியோரிடம் கூறினார். மேலும் விபத்தில் காயம் அடைந்தவர்களை மீட்டு உடனடியாக ஆஸ்பத்திரியில் சேர்த்த ஜெய்லானி, உப்பு அருள்ராஜ் ஆகியோருக்கு அமைச்சர் விஜயபாஸ்கர் பொன்னாடை அணிவித்து பாராட்டினார்.

Next Story