பாலியல் தொல்லை காரணமாக குமரி கலெக்டர் அலுவலகத்தில் பெண் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு


பாலியல் தொல்லை காரணமாக குமரி கலெக்டர் அலுவலகத்தில் பெண் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு
x
தினத்தந்தி 14 Oct 2019 11:15 PM GMT (Updated: 14 Oct 2019 10:25 PM GMT)

பாலியல் தொல்லை புகார் மீது நடவடிக்கை கோரி பெண் ஒருவர் குமரி கலெக்டர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

நாகர்கோவில்,

வாரந்தோறும் திங்கட்கிழமை அன்று மக்கள் குறை தீர்க்கும் முகாம் நாகர்கோவிலில் உள்ள குமரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடைபெறுவது வழக்கம். அதேபோல் நேற்று நடந்த முகாமில் மனு கொடுப்பதற்காக கலெக்டர் அலுவலகத்துக்கு ஏராளமானோர் வந்திருந்தனர்.இந்த பரபரப்புக்கு இடையே மனு கொடுக்க வந்த பெண் ஒருவர் திடீரென மறைத்து வைத்திருந்த மண்எண்ணெய் கேனை எடுத்து அவரது உடலில் ஊற்றினார். இதனை கண்ட பொதுமக்களில் சிலர் மண்எண்ணெய் கேனை பிடுங்கி தீக்குளிக்க விடாமல் தடுத்தனர். மேலும் போலீசாரும் விரைந்து வந்தனர்.

பாலியல் தொல்லை

தொடர்ந்து தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட பெண்ணை பிடித்து விசாரணை நடத்தினர். அதில், பேச்சிப்பாறை அருகே உள்ள ஆலம்பாறை பகுதியை சேர்ந்த பாலன் மனைவி ஷீலா (வயது 42) என்பதும், அங்கன்வாடி பள்ளியில் ஊழியராக பணியாற்றிய நிலையில் சில காரணங்களால் பணியில் இருந்து நீக்கப்பட்டதும் தெரிய வந்தது.

மேலும் அந்த பகுதியை சேர்ந்த ஒருவர் ஷீலாவுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக தெரிகிறது. இதுகுறித்து ஷீலா புகார் கொடுத்தும் போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லையாம்.

பரபரப்பு

இந்தநிலையில் அவர் பாலியல் தொல்லை கொடுத்த நபர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி கலெக்டர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்றது தெரியவந்தது.

பின்னர் ஷீலாவை போலீசார் மீட்டு ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திாிக்கு சிகிச்சைக்காக அனுப்பினர். இந்த சம்பவம் கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும் இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story