பூந்தமல்லி அருகே சுத்தியலால் அடித்து மனைவி கொலை; போலீசில் கணவர் சரண்


பூந்தமல்லி அருகே சுத்தியலால் அடித்து மனைவி கொலை; போலீசில் கணவர் சரண்
x
தினத்தந்தி 15 Oct 2019 12:00 AM GMT (Updated: 14 Oct 2019 11:58 PM GMT)

சுத்தியலால் தலையில் அடித்தும், கத்தியால் குத்தியும் மனைவியை கொலை செய்த கணவர், போலீஸ் நிலையத்தில் சரண் அடைந்தார்.

பூந்தமல்லி,

சென்னை பூந்தமல்லியை அடுத்த காட்டுப்பாக்கம், அம்மன் நகர், 9-வது தெருவை சேர்ந்தவர் கிட்டப்பன் (வயது 35), எலக்ட்ரீசியன். இவருடைய மனைவி சுமதி (27). இவர்களுக்கு வீரமணி (8), பரணி (5) என 2 மகன்கள் உள்ளனர். இவர்களில் வீரமணி 3-ம் வகுப்பும், பரணி 1-ம் வகுப்பும் படித்து வருகின்றனர்.

கணவன்-மனைவி இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக சுமதி, தனது கணவரை விட்டு பிரிந்து மகன்களுடன் அதே பகுதியில் உள்ள தனது தாய் வீட்டில் வசித்து வந்தார்.

நேற்று காலை தனது மகன்கள் இருவரையும் பள்ளிக்கூடம் அனுப்பிவிட்டு கணவரை பார்க்க சுமதி வந்தார். அப்போது கணவன்-மனைவி இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

இதில் ஆத்திரமடைந்த கிட்டப்பன், வீட்டில் இருந்த சுத்தியலால் தனது மனைவி சுமதியின் தலையில் ஓங்கி அடித்தார். இதில் பலத்த காயம் அடைந்த சுமதி ரத்த வெள்ளத்தில் மயங்கி விழுந்தார்.

ஆனாலும் ஆத்திரம் அடங்காத கிட்டப்பன், வீட்டில் இருந்த கத்தியை எடுத்துவந்து சுமதியின் கழுத்து, வயிறு உள்ளிட்ட இடங்களில் சரமாரியாக குத்திக்கொலை செய்தார். சுமதியின் அலறல் சத்தம் கேட்டு கீழ் வீட்டில் இருந்தவர்கள் ஓடிவந்தனர். சுமதி ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடப்பதை கண்டு அவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

அப்போது கத்தியுடன் நின்ற கிட்டப்பன், அவர்களை தள்ளிவிட்டு அங்கிருந்து தப்பிச்சென்று பூந்தமல்லி போலீஸ் நிலையத்தில் சரண் அடைந்தார். இன்ஸ்பெக்டர் கிரி, சப்-இன்ஸ்பெக்டர் சுரேஷ் ஆகியோர் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று கொலையான சுமதி உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர். மேலும் இதுபற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

மனைவி சுமதி மீது கிட்டப்பனுக்கு சந்தேகம் ஏற்பட்டதால் கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இதுகுறித்து போலீஸ் நிலையத்தில் புகார் அளித்து உள்ளார். போலீசார் இருவரையும் அழைத்து சமாதானம் செய்து வைத்தனர். பின்னர் இருவரும் சேர்ந்து வாழ்ந்து வந்தனர்.

அதன்பிறகு மீண்டும் தகராறு ஏற்பட்டதால் சுமதி கணவரை விட்டு பிரிந்து தனது மகன்களுடன் தாய் வீட்டில் வசித்து வந்தார். மகன்களின் படிப்பு செலவுக்கு கிட்டப்பன் பணம் கொடுக்காமல் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

மேலும் சுமதியின் தங்கை ஏற்கனவே இறந்து விட்டதால் அவரது மகனையும் சுமதிதான் வளர்த்து வந்தார். நேற்று வீட்டில் இருந்த தனது தங்கையின் போட்டோவை எடுக்க சுமதி சென்றதாக கூறப்படுகிறது. அப்போது கணவன்-மனைவி இடையே ஏற்பட்ட வாக்குவாதம் முற்றியதால் சுமதியை கிட்டப்பன் சுத்தியலால் அடித்தும், கத்தியால் குத்தியும் கொலை செய்துவிட்டு போலீஸ் நிலையத்தில் சரண் அடைந்தது விசாரணையில் தெரியவந்து உள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

தாய் கொலை செய்யப்பட்ட நிலையில், தந்தை போலீஸ் நிலையத்தில் சரண் அடைந்து விட்டதால் அவர்களது 2 மகன்களும், சுமதியின் தங்கை மகனும் என 3 குழந்தைகளும் ஆதரவற்ற நிலையில் நிற்பது அந்த பகுதி மக்கள் இடையே சோகத்தை ஏற்படுத்தியது.

Next Story