படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள், மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் - கலெக்டர் தகவல்


படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள், மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் - கலெக்டர் தகவல்
x
தினத்தந்தி 15 Oct 2019 10:45 PM GMT (Updated: 15 Oct 2019 5:40 PM GMT)

படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள், மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் என்று கலெக்டர் சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

விழுப்புரம்,

விழுப்புரம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மைய அலுவலகத்தில் 1.10.19 முதல் தொடங்கிய காலாண்டிற்கு படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள், அனைத்து வகை மாற்றுத்திறனாளிகளிடம் இருந்து வேலைவாய்ப்பற்றோர் உதவித்தொகை வழங்கும் திட்டத்தின் கீழ் பயன்பெறுவதற்கான விண்ணப்பங்கள் தற்போது பெறப்படு கின்றன. இதற்கு 10-ம் வகுப்பு தோல்வி, தேர்ச்சி மற்றும் அதற்கு மேலான கல்வித்தகுதியை பெற்றவர்கள் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து பதிவை தொடர்ந்து புதுப்பித்து 30.9.19 அன்றைய நிலையில் 5 ஆண்டுகள் நிறைவடைந்த பின்னர் வேலைவாய்ப்பின்றி காத்திருக்கும் இளைஞர்களுக்கும், வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து ஓராண்டு நிறைவடைந்த மாற்றுத்திறனாளிகளுக்கும் தமிழக அரசால் உதவித்தொகை வழங்கப்படுகிறது. இத்திட்டத்தின் கீழ் பயன்பெற மனுதாரரின் குடும்ப ஆண்டு வருமானம் ரூ.72 ஆயிரத்திற்கு மிகாமல் இருத்தல் வேண்டும்.

இந்த உதவித்தொகையை பெறுவதற்கு தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியின மனுதாரர்கள் 31.12.19 அன்றைய நிலையில் 45 வயதுக்குள்ளும், இதர இனத்தை சேர்ந்தவர்கள் 40 வயதுக்குள்ளும் இருத்தல் வேண்டும். உதவித்தொகை விண்ணப்ப படிவம் பெற விரும்பும் மனுதாரர்கள் தங்களின் வேலைவாய்ப்பு அடையாள அட்டையை ஆதாரமாக காண்பித்து மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் விண்ணப்பங்களை அனைத்து வேலை நாட்களிலும் இலவசமாக பெற்றுக்கொள்ளலாம்.

இத்திட்டத்தின் கீழ் ஏற்கனவே பயன்பெற்றவர்கள் மீண்டும் விண்ணப்பிக்க தகுதியற்றவர்கள். மேலும் இத்திட்டத்தின் கீழ் பயன்பெறுபவர்களின் பதிவு ரத்து செய்யப்படமாட்டாது. விண்ணப்பங்களுடன் அனைத்து அசல் கல்வி சான்றிதழ்கள், வேலைவாய்ப்பு அடையாள அட்டை, தேசிய மயமாக்கப்பட்ட வங்கி கணக்கு புத்தகம் ஆகியவற்றுடன் மனுதாரர்கள் அடுத்த மாதம் (நவம்பர்) 30-ந் தேதி வரை நேரில் சமர்பிக்கலாம்.

இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Next Story