தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வெல்லம் தயாரிக்கும் பணி தீவிரம்


தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வெல்லம் தயாரிக்கும் பணி தீவிரம்
x
தினத்தந்தி 15 Oct 2019 10:30 PM GMT (Updated: 15 Oct 2019 7:48 PM GMT)

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வெல்லம் தயாரிக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

நொய்யல்,

கரூர் மாவட்டத்தில் முத்தனூர், கவுண்டன்புதூர், நடையனூர், கரைப்பாளையம், நொய்யல், சேமங்கி, கொளத்துப்பாளையம், வேட்டமங்கலம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஏக்கரில் விவசாயிகள் கரும்பு பயிரிட்டுள்ளனர். நிலத்தில் கரணை பதித்தவுடன் பல விவசாயிகள் புகளூரில் உள்ள தனியார் சர்க்கரை ஆலைக்கு கரும்பு வெட்டிச்செல்வதற்கு பதிவு செய்கின்றனர். பதிவு செய்யாத விவசாயிகள் கரும்பு விளைந்தவுடன் பல்வேறு பகுதிகளில் உள்ள வெல்லம் தயாரிக்கும் ஆலை அதிபர்களுக்கு, கரும்பை ஒரு டன்னுக்கு ரூ.2 ஆயிரத்து 400 வரை விற்பனை செய்கின்றனர்.

வாங்கிய கரும்புகளை எந்திரத்தின் மூலம் சாறு பிழிந்து இரும்பு கொப்பரையில் ஊற்றி காய வைத்து சரியான பதம் வந்து பாகு ஆனவுடன், மர அச்சுத்தொட்டியில் ஊற்றி உலரவைத்து அச்சு வெல்லம் தயாரிக்கின்றனர். அதேபோல் மரத்தொட்டியில் கரும்பு பாகுவை ஊற்றி உலரவைத்து துணிகள் மூலம் உருண்டை பிடித்து உருண்டை வெல்லம் தயாரிக்கின்றனர். பின்னர் நன்கு உலரவைத்து சாக்குகளில் 30 கிலோ கொண்ட சிப்பங்களாக தயார் செய்கின்றனர். அவற்றை வியாபாரிகள் வாங்கி லாரிகள் மூலம் ஆந்திரா, கேரளா, கர்நாடகா, மராட்டியம், உத்தரபிரதேசம், சண்டிகார் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களுக்கும், தமிழ்நாட்டில் உள்ள பல்வேறு மாவட்டங்களுக்கும் லாரிகள் மூலம் அனுப்பி வைக்கின்றனர்.

அதிக அளவில் விற்பனை

மேலும் தீபாவளி பண்டிகையையொட்டி பல்வேறு இனிப்பு வகை பலகாரங்கள் தயாரிக்கப்படும். இதற்கு வெல்லம் பயன்படும் என்பதால், தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஒவ்வொரு ஆண்டும் வெல்லம் விற்பனை அதிக அளவில் இருக்கும். இந்நிலையில் வருகிற 27-ந் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ளதால், முனிநாதபுரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் ஆலைக்கொட்டகைகளில் உருண்டை மற்றும் அச்சு வெல்லம் தயாரிக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. தயார் செய்யப்படும் வெல்லங்கள் தமிழ்நாட்டில் உள்ள பல்வேறு மாவட்டங்களுக்கும், வெளிமாநிலங்களுக்கும் அனுப்பி வைக்கப்பட உள்ளன.


Next Story