கொசுக்கள் உற்பத்தியாகும் பொருட்களை அப்புறப்படுத்த பொதுமக்களுக்கு விழிப்புணர்வு


கொசுக்கள் உற்பத்தியாகும் பொருட்களை அப்புறப்படுத்த பொதுமக்களுக்கு விழிப்புணர்வு
x
தினத்தந்தி 15 Oct 2019 10:15 PM GMT (Updated: 15 Oct 2019 7:52 PM GMT)

கரூரில் டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து அரசு அதிகாரிகள் ஆலோசனை மேற்கொண்டனர். கரூர் நகராட்சியில் டெங்கு கொசு ஒழிப்பு பணியில் 225 பணியாளர்கள் ஈடுபடுகின்றனர்.

கரூர்,

கரூர் மாவட்டத்தில் பொதுமக்களுக்கு காய்ச்சல், டெங்கு காய்ச்சல் ஏற்படாமல் தடுப்பது மற்றும் விழிப்புணர்வு ஏற்படுத்துவது குறித்து அனைத்துத்துறை முதல்நிலை அலுவலர்களுடனான மாவட்ட கண்காணிப்புக்குழு கூட்டம், நேற்று மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற்றது. கூட்டத்திற்கு கலெக்டர் அன்பழகன் தலைமை தாங்கினார்.

கூட்டத்தின்போது, டெங்கு காய்ச்சல் ஏடிஸ் கொசுக்களால் பரவக்கூடியது. இவ்வகை கொசுக்கள் வீட்டைச்சுற்றிலும் தூக்கி எறியப்பட்ட பயனற்ற டயர்கள், பாட்டில்கள், பிளாஸ்டிக் பொருட்கள், பாலித்தீன் பைகள், பிளாஸ்டிக் கப், தேங்காய் சிரட்டைகள் உள்ளிட்ட பொருட்களில் தேங்குகிற மழைநீரில் உற்பத்தியாகின்றன. எனவே இவற்றை அப்புறப்படுத்திட பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். மேலும் பொதுமக்களுக்கு குடிநீர் வழங்கும் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகளை குறிப்பிட்ட நாட்களில் சுத்தம் செய்து குளோரினேசன் செய்யப்பட்டுள்ளதை சம்பந்தப்பட்ட அலுவலர்கள் உறுதி செய்ய வேண்டும், என்று அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டது.

கொசு ஒழிப்பு பணி

கூட்டத்தில், குளித்தலை சப்-கலெக்டர் ஷேக்அப்துல் ரகுமான், மாவட்ட வருவாய் அதிகாரி ராஜேந்திரன், ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் கவிதா, மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) செல்வசுரபி, கரூர் வருவாய் கோட்டாட்சியர் சந்தியா, ஊராட்சிகளின் உதவி இயக்குனர் உமாசங்கர், மருத்துவ கல்லூரி முதல்வர் ரோஸி வெண்ணிலா, மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி முத்துகிரு‌‌ஷ்ணன் உள்ளிட்ட அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

இந்த நிலையில் நேற்று கரூர் நகராட்சி தாந்தோணி, 47-வது வார்டு பாரதியார் மற்றும் வாஞ்சிநாதன் தெரு பகுதியில் நடைபெற்று வரும் டெங்கு காய்ச்சல் தடுப்பு பணிகள் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அப்போது டெங்கு காய்ச்சல் எவ்வாறு பரவுகிறது? என்பது குறித்து பொதுமக்களுக்கு துண்டு பிரசுரம் வினியோகம் செய்யப்பட்டது. டெங்கு தடுப்பு பணிக்காக கரூர் நகராட்சி பகுதியில் 225 கொசு ஒழிப்பு பணியாளர்கள் பணியமர்த்தப்பட்டு, அவர்கள் ஒரு நாளைக்கு 50 வீடுகள் வீதம் கொசு அழிப்பு பணியில் ஈடுபட உள்ளார்கள். மேலும் அனைத்து பகுதி பொதுமக்களுக்கும் நிலவேம்பு குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது என்று நகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர். ஆய்வின்போது, கரூர் நகராட்சி ஆணையர்(பொறுப்பு) ராஜேந்திரன், நகர்நல அதிகாரி ஸ்ரீபிரியா, உதவி பொறியாளர் நக்கீரன் உள்பட பலர் உடனிருந்தனர்.

Next Story