அவினாசி பகுதியில் துப்பாக்கியை காட்டி மிரட்டி வழிப்பறியில் ஈடுபட்ட 6 பேர் கைது


அவினாசி பகுதியில் துப்பாக்கியை காட்டி மிரட்டி வழிப்பறியில் ஈடுபட்ட 6 பேர் கைது
x
தினத்தந்தி 16 Oct 2019 11:15 PM GMT (Updated: 16 Oct 2019 5:07 PM GMT)

அவினாசி பகுதியில் துப்பாக்கியை காட்டி மிரட்டி வழிப்பறியில் ஈடுபட்ட 6 பேரை போலீசார் கைது செய்தனர். முக்கிய குற்றவாளியை போலீசார் தேடி வருகிறார்கள்.

பெருமாநல்லூர்,

திருப்பூர் மாவட்டம் பெருமாநல்லூர் அருகே பரமசிவம்பாளையம் பகுதியை சேர்ந்த பனியன் நிறுவன தொழிலாளி கருப்பையா(வயது32). இவர் கடந்த 6-ந் தேதி வேலை முடிந்து வீட்டிற்கு நடந்து சென்று கொண்டிருந்த போது பரமசிவம்பாளையம் பகுதியில் மோட்டார்சைக்கிளில் வந்த 3 மர்ம ஆசாமிகள் கருப்பையாவை துப்பாக்கியை காட்டி மிரட்டி ரூ.15 ஆயிரம் மதிப்புள்ள செல்போனை பறித்து சென்றனர்.

இதேபோன்று கடந்த 8-ந்தேதி புதுப்பாளையம் பிரிவு பகுதியை சேர்ந்த பனியன் நிறுவன தொழிலாளி சுரேஷ் (35) வேலை முடிந்து மோட்டார்சைக்கிளில் வீடு திரும்பும் போது வேலாயுதம்பாளையம் பிரிவு அருகே அவரது நெற்றியில் துப்பாக்கியை வைத்து மிரட்டிய 3 மர்ம ஆசாமிகள் அவரிடமிருந்து ரூ.10ஆயிரம் மதிப்புள்ள செல்போன் மற்றும் ரூ.1,500 ஐ பறித்துச்சென்றனர்.

மேலும் கடந்த 9-ந்தேதி ரங்காநகர் பகுதியில் சினிமா பார்த்துவிட்டு ஷாஜ்(32), அவரது மனைவி அபிராமி(28) மற்றும் அவர்களது 4 வயது குழந்தையுடன் மோட்டார்சைக்கிளில் வீடு திரும்பிக்கொண்டிருந்தபோது அவர்களை வழி மறித்த மர்ம ஆசாமிகள் குழந்தையின் நெற்றியில் துப்பாக்கியை வைத்து மிரட்டி 4½ பவுன் நகையை பறித்துச்சென்றனர். மேலும் கடந்த 10-ந்தேதி முட்டியங்கிணறு பகுதியில் வசிக்கும் ரம்யா(26) தனது குழந்தையுடன் மொபட்டில் சென்று கொண்டிருந்த போது, ரம்யாவின் பின்னால் மோட்டார்சைக்கிளில் வந்த 3 மர்ம ஆசாமிகள் தங்க நகை என நினைத்து அவர் அணிந்திருந்த கவரிங் நகையை பறித்து சென்றனர்.

கடந்த 11-ந்தேதி பணி முடிந்து மோட்டார்சைக்கிளில் வீடு திரும்பி கொண்டிருந்த பனியன் நிறுவன தொழிலாளி தீனதயாளனை (29) அய்யன்தோட்டம் பிரிவு அருகே 4 மர்ம ஆசாமிகள் துப்பாக்கியால் தாக்கி ரூ.10 ஆயிரம் மதிப்புள்ள அவரது செல்போனை பறித்துச்சென்றனர். இந்த வழிப்பறி சம்பவங்கள் குறித்து பெருமாநல்லூர், அவினாசி போலீஸ் நிலையங்களில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

இதுதொடர்பாக மேற்கு மண்டல ஐ.ஜி.பெரியய்யா, கோவை டி.ஐ.ஜி. பிரதீப்குமார்(பொறுப்பு) ஆகியோர் உத்தரவின் பேரில் திருப்பூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு திஷா மித்தல் வழிகாட்டுதலின் பேரில் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு ஜெயச்சந்திரன் மேற்பார்வையில் அவினாசி துணை போலீஸ் சூப்பிரண்டு பரமசாமி தலைமையில் அவினாசி போலீஸ் நிலைய குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் பிரேமா, பெருமாநல்லூர் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார், குன்னத்தூர் இன்ஸ்பெக்டர் தவமணி, சப்-இன்ஸ்பெக்டர்கள் காமராஜ், கார்த்திக் தங்கம் மற்றும் போலீசார் கொண்ட 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டு தீவிர தேடுதல் வேட்டை நடந்தது.

இந்த நிலையில் நேற்றுமுன்தினம் அவினாசி பழங்கரையில் போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது மோட்டார்சைக்கிளில் வந்த 3 பேரை பிடித்து விசாரித்த போது, அவர்கள் துப்பாக்கியை காட்டி மிரட்டி வழிப்பறி சம்பவங்களில் ஈடுபட்டவர்கள் என தெரியவந்தது.

அவர்களை போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர். இதில் அவர்கள் 3 பேரும் பீகார் மாநிலம் வைசாலி மாவட்டம் மியாபேரூரரை சேர்ந்த முஸ்தபா அன்சாரி (26), பாகுவன்பூரை சேர்ந்த சந்தன்குமார் (33), குசைன் கூடு பகுதியை சேர்ந்த மற்றொரு சந்தன்குமார்(33) என்பது தெரியவந்தது.

மேலும் அவர்களிடம் விசாரணை நடத்தியதில் இந்த வழிப்பறி சம்பவங்களில் அவர்களுக்கு உடந்தையாக பீகார் மாநிலம் சிதமாரி பகுதியை சேர்ந்த நாவல்ஷா(20), நீலகிரி மாவட்டம் பந்தலூர் நெல்லியம்பாளையத்தை சேர்ந்த பிரதீப்குமார் (33), ஆந்திர மாநிலம் நெல்லூர் கொலந்துரு பகுதியை சேர்ந்த அபி என்ற ஶ்ரீபதிசுனில் (25) ஆகியோர் இருந்தது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து 6 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

இவர்கள் 6 பேரும் தெக்கலூரில் உள்ள பனியன் நிறுவனத்தில் தங்கியிருந்து வேலை செய்து, பின்னர் துப்பாக்கியை காட்டி வழிப்பறி சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது. அவர்களிடமிருந்து 2 நாட்டு கைத்துப்பாக்கிகள், 6 தோட்டாக்கள், 3 அடி நீள கத்தி, 4½ பவுன் நகை, செல்போன்கள், மோட்டார்சைக்கிள், ஏ.டி.எம். கார்டுகள், பான் கார்டு ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.

வழிப்பறியில் ஈடுபட்டவர்களை கைது செய்த தனிப்படை போலீசாரை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு திஷாமித்தல் பாராட்டி வாழ்த்து தெரிவித்தார்.

கைதான வழிப்பறி கொள்ளையர்களிடம் போலீசார் மேற்கொண்டு விசாரித்த போது, இவர்கள் பண்டிகை நேரத்தில் கடை மற்றும் வங்கிகளில் கொள்ளையடிக்க திட்டம் தீட்டி இருந்தது தெரியவந்தது. மேலும் இந்த வழிப்பறி சம்பவங்களுக்கு மூளையாக இருந்து செயல்பட்ட முக்கிய குற்றவாளி தப்பி விட்டதாகவும், அவனையும் தீவிரமாக தேடிக்கொண்டிருப்பதாகவும் போலீசார் தெரிவித்தனர்.

மேலும் திருப்பூர் மாநகர பகுதிகளில் நடைபெற்ற திருட்டு மற்றும் கொள்ளை சம்பவங்களில் இந்த கும்பலுக்கு ஏதேனும் தொடர்புள்ளதா? என்பதை அறிய திருப்பூர் மாநகர போலீசாரும் தீவிர விசாரணை நடத்த உள்ளனர்.

Next Story