அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றிபெறுவோம் - நாராயணசாமி நம்பிக்கை


அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றிபெறுவோம் - நாராயணசாமி நம்பிக்கை
x
தினத்தந்தி 16 Oct 2019 11:30 PM GMT (Updated: 16 Oct 2019 5:27 PM GMT)

காமராஜ் நகர் தொகுதியில் அதிகப்படியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றிபெறுவோம் என்று முதல்-அமைச்சர் நாராயணசாமி கூறினார்.

புதுச்சேரி,

புதுவை முதல்-அமைச்சர் நாராயணசாமி காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

புதுவையில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று (வியாழக்கிழமை) மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர் ஜான்குமாரை ஆதரித்து இன்று (வியாழக்கிழமை) பிரசாரம் மேற்கொள்கிறார். கடந்த 2016-ல் நெல்லித்தோப்பு தொகுதி இடைத்தேர்தலின்போது பிரசாரத்துக்கு வர அழைத்தோம்.

அதன்படி புதுவை வந்து பிரசாரம் மேற்கொண்டார். அதன் காரணமாக மிகப் பெரிய அளவு வாக்கு வித்தியாசத்தில் வெற்றிபெற்றோம். கடந்த நாடாளுமன்ற தேர்தல், தட்டாஞ்சாவடி இடைத்தேர்தலின்போதும் காங்கிரஸ், தி.மு.க. வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் மேற்கொண்டார். அதன் பலனாக காங்கிரஸ் வேட்பாளர் வைத்திலிங்கம் 2 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றார்.

என்.ஆர்.காங்கிரஸ் வசம் இருந்த தட்டாஞ்சாவடி தொகுதியில் தி.மு.க. வேட்பாளர் வெங்கடேசன் வெற்றிபெற்றார். இப்போது ஜான்குமாரை ஆதரித்து பிரசாரம் செய்ய வரும் மு.க.ஸ்டாலினுக்கு சிறப்பான வரவேற்பு கொடுப்போம். அவர் 4 இடங்களில் பேசுகிறார்.

அவரது வருகையினால் வெற்றி உறுதி செய்யப்பட்டது மட்டுமில்லாமல் அதிகப்படியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவதற்கு அடித்தளமாக இருக்கும்.

இவ்வாறு நாராயணசாமி கூறினார்.

பேட்டியின்போது அமைச்சர் நமச்சிவாயம், வைத்திலிங்கம் எம்.பி., தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் சிவா, வெங்கடேசன், வடக்கு மாநில அமைப்பாளர் எஸ்.பி.சிவக்குமார், காரைக்கால் மாவட்ட அமைப்பாளர் நாஜிம் ஆகியோர் உடனிருந்தனர்.

Next Story