யாரும் புறக்கணிக்கவில்லை: அ.தி.மு.க. தலைவர்களுடன்தான் வாக்குசேகரிக்கிறோம் - ரங்கசாமி விளக்கம்


யாரும் புறக்கணிக்கவில்லை: அ.தி.மு.க. தலைவர்களுடன்தான் வாக்குசேகரிக்கிறோம் - ரங்கசாமி விளக்கம்
x
தினத்தந்தி 16 Oct 2019 11:15 PM GMT (Updated: 16 Oct 2019 7:01 PM GMT)

எங்களை யாரும் புறக்கணிக்கவில்லை, அ.தி.மு.க. தலைவர்களுடன்தான் வாக்கு சேகரிக் கிறோம் என்று ரங்கசாமி கூறினார்.

புதுச்சேரி,

புதுவை காமராஜ் நகர் இடைத்தேர்தலில் என்.ஆர்.காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் வேட்பாளர் புவனேஸ்வரனை ஆதரித்து என்.ஆர்.காங்கிரஸ் தலைவர் ரங்கசாமி சங்கரதாஸ் சாமிகள் நகர், தேவகி நகர், செந்தாமரை நகர் பகுதிகளில் வீடுவீடாக சென்று வாக்கு சேகரித்தார். அவருடன் அ.தி.மு.க. சட்டமன்ற கட்சி தலைவர் அன்பழகன் எம்.எல்.ஏ., மாநில செயலாளர் புருஷோத்தமன், துணை செயலாளர் கணேசன், பாரதீய ஜனதா மாநில தலைவர் சாமிநாதன் எம்.எல்.ஏ. மற்றும் நிர்வாகிகள் உடனிருந்தனர்.

வாக்குசேகரிப்பின்போது ரங்கசாமி நிருபர்களிடம் கூறியதாவது:-

அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளரும், தமிழக துணை முதல்-அமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் போட்டியிடும் அ.தி.மு.க. வேட்பாளரை ஆதரித்து பிரசாரம் செய்ய வந்தார். அவர் புதுவையில் வந்து தங்கியபோது நாங்கள் சென்று பார்த்தோம். அப்போது மறுபடியும் விக்கிரவாண்டி பிரசாரத்துக்கு வர இருப்பதாகவும், அப்போது காமராஜ் நகர் தொகுதியிலும் பிரசாரம் மேற்கொள்வதாக உறுதியளித்துவிட்டு சென்றுள்ளார்.

ஜெயலலிதா உயிரோடு இருக்கும்போதே நாங்கள் ராஜ்யசபா எம்.பி. பதவியை அ.தி.மு.க.வுக்கு வழங்கினோம். எங்களை அ.தி.மு.க. புறக்கணிப்பதாக முதல்-அமைச்சர் கூறியுள்ளார். அ.தி.மு.க. மாநில செயலாளர் புருஷோத்தமன், சட்டமன்ற கட்சி தலைவர் அன்பழகன் மற்றும் நிர்வாகிகள் எங்களோடு நாள்தோறும் வந்து வாக்கு கேட்கிறார்கள். அவர்கள் அ.தி.மு.க. தலைவர்கள் இல்லையா?

முதல்-அமைச்சர் நாராய ணசாமி எதையும், எப்படியும், எப்போதும் பேசக்கூடியவர். காங்கிரஸ் வேட்பாளர் ஜான்குமாரை ஆதரித்து டெல்லி காங்கிரஸ் தலைவர்கள் வந்து பிரசாரம் செய்கிறார்களா?

இவ்வாறு ரங்கசாமி கூறினார்.

Next Story